மனமே மலர்க -பாகம் 20.

சம்பிரதாயம்

மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர்.திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார்.இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர்.அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லைஎன்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார்.போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார்.அந்த சகோதரர்கள் ,”நாங்கள் எங்கள் தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணமாக நன்றி சொல்வோம்.”என்றனர்.இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய போதகர் அவர்களிடம் இறை வழிபாட்டு முறைகளை விளக்கினார்.அவர்களுக்கு சில பாடல்கள் புரியவில்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர்.பல முறை சொல்லிக் கொடுத்தும் அவர்களால் சரியாக உச்சரித்துப் பாடமுடியவில்லை.அதற்காக அவர்கள் வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.இதற்கிடையில் ஒருநாள் ஒரு கப்பல் அங்கு வந்ததால் போதகரும் அவர்களிடம் தான் சொல்லிக் கொடுத்தவற்றைக் கடைப்பிடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு கப்பலில் ஏறினார்.கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. .மக்கள் அனைவரையும் பார்த்துக் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்,போதகர்.அப்போது அவர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.அந்த மூவரும் கடலில் வேகமாக நடந்தவாறு கப்பலை நோக்கிக் கத்தியபடி வந்து கொண்டிருந்தனர்.கப்பல் உடனே நிறுத்தப்பட்டது. மூச்சிறைக்க வந்த அவர்கள் போதகரிடம்,”ஐயா,நீங்கள் சொல்லிக் கொடுத்தது மறந்துவிட்டது.தயவு செய்து இன்னொரு முறை சொல்லிக் கொடுங்கள்,”என்றனர்.போதகர் சொன்னார்,”என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.உண்மையான பக்தி சம்பிரதாயங்களில் இல்லை என்று நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டீர்கள்.நீங்கள் உங்கள் வழக்கப்படியே இறைவனை வணங்குங்கள்.கடலிலே நடக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் இறைவனின் கருணை உள்ளது .உங்கள் காலில் விழக்கூட நான் தகுதியற்றவன்,” என்றார்.அவர் சொல்வது புரியாது அம்மூவரும் அவரிடம் விடைபெற்றனர்.

0000000000000000000000000

புத்திசாலித்தனம்

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.

நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்.

0000000000000000000000000

ஏமாற்றமா?

ஏதாவது ஒரு விசயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா?அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யுங்கள்.நாளானால் அதுவே உங்கள் மூளையை ஒரு அமிலம் போல அரிக்க ஆரம்பித்துவிடும்.ஏமாற்றத்திலிருந்து விடுபட சில யோசனைகள்:

1.முதலில் பதட்டப்படாமல் சற்று அமைதி ஆகுங்கள்.உங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்துக் கொள்ளுங்கள்.இதே பிரச்சினை நாளைக்கு சாதாரணமானதாகத் தெரியலாம்.

2.உங்களுக்கோ பிறருக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் உங்கள் ஏமாற்ற உணர்வுக்கு வடிகால் கொடுங்கள்.

3.உங்கள் பெற்றோரிடமோ,மனைவியிடமோ,நண்பர்களிடமோ இது பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்.

4.கோபப்படுவதற்கோ,வருத்தப்படுவதற்கோ உரியதுதானா இப்பிரச்சினை என்று கொஞ்சம் யோசியுங்கள்.

5.இந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு அடுத்து இதைவிட சிறப்பாக எப்படி செயல்பட முடியும் என்று பாருங்கள்.

6.ஒரு தோல்வி உங்களை ஒரு உதவாக்கரை ஆக்கிவிட முடியாது.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.

7.ஏமாற்றத்தைத் தவிர்க்க நன்கு திட்டமிடுங்கள்.அதில் மிக உறுதியாக இருக்க வேண்டாம்.திட்டங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

8.ஏமாற்றம் கண்டு மனம் தளர்ந்து விடாதீர்கள்.இந்த சூழ்நிலையில் இந்தக் காரியத்தை நான் சிறப்பாக செய்கிறேனா என்பதை மட்டும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

9.நாளை நமதே என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.கெட்டிக்காரத்தனம் என்பது இயற்கையாய் வருவதல்ல.நாம் வளர்த்துக் கொள்வதுதான்.

000000000000000000000000

அச்சம்

வாழ்வில் நடப்பனவற்றைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டே இருந்து விடுதல்,அவற்றோடு பழகிப் போய்விடுதல்,சூழ்நிலையில் நிகழும் நிகழ்ச்சிகள் மீது பழி போடுதல்-இத்தகைய மனோபாவங்களுடன் தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.

உள்ளபடி,உள்ள நிலையிலிருந்து நாம் ஏன் தப்பி ஓடுகிறோம்? எடுத்துக் காட்டாக, நாம் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்.சாவுக்குப்பின் நமக்கு நேரிட இருக்கும் நிலையினைப் பலவிதமான கருத்துக்கள், நம்பிக்கைகள், கொள்கைகள் இவற்றினை உருவாக்கி,அவற்றின் மூலம் சாவு என்ற உண்மையை உள்ளது உள்ளபடி காண இயலாதவாறு மறைத்து விடுகிறோம்.என்ன செய்தால் என்ன?சாவை நம்மால் தவிர்க்க முடியாது.அது நம்மை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.எதனையும் உள்ளது உள்ளபடி உணர்வதற்கு அதன் முன் நின்று கண் கொண்டு நோக்க வேண்டுமேயன்றி அதற்கு முதுகு காட்டி ஓடுவதில் பயனில்லை.நம்மில் பெரும்பாலோனோர் வாழவும் அஞ்சுகிறோம்,சாகவும் அஞ்சுகிறோம்.நம் குடும்பம் என்ன ஆகுமோ என்ற அச்சம்,நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம்,நமது வேலை போய்விடுமோ என்ற அச்சம்,இது போன்ற நூற்றுக் கணக்கான அச்சங்கள்.அஞ்சுகின்ற மன நிலையில் தான் நாம் இருக்கிறோம்.உண்மையை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடிவதில்லை.

000000000000000000000000000

கண்ணாடி

மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.குரு அவனிடம், ”இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,”என்றார்.அவனும்,”மக்கள் போய் வருகிறார்கள்,”என்றான்.குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,”இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,”என்றார்.அவனும் பார்த்து விட்டு,”என் முகம் தெரிகிறது,”என்றான்.”மக்கள் யாரும் தெரியவில்லையா?”என்று குரு கேட்க அவன் இல்லை என்றான்.இப்போது குரு சொன்னார்,”இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன.ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை.ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது.நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும்.அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி,”

00000000000000000000000000

வருங்காலம்

உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது.சொல்லவும் கூடாது.வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.,இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.இது ஒருக்காலும் நடக்காது.நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.நடந்து முடிந்ததை நீங்கள் சீர் செய்ய முடியாது.நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால் தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள்தனம்.நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..அது இறந்த காலமாகி விடுகிறது.

கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு ‘பகிர்ந்து கொள்ளுதல்’என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.

00000000000000000000000000000

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்?

ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை.நீங்கள் மற்றவர்களது அபிப்பிராயங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள்.நீங்கள்,மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை.நீங்கள் அழகானவர் என்று மற்றவர் சொன்னால் ,நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள்.அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால்,அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள். இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஒருவர் நீங்கள் அழகானவர் என்று சொல்ல,அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் ,நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது.இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும்.இப்போது நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள்.அதாவது,நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள்.நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை.உங்களுக்கென்று எந்த தனித் தன்மையும் இல்லை.நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான்.ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள்.ஏனெனில் அடுத்தவரது கருத்துக்கள் மாறினால்,நீங்களும் மாற வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.

முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள்.அப்போது உங்களைத்தவிர வேறு யாரும் நல்லவனாகவோ,கெட்டவனாகவோ மாற்ற இயலாது.பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும்,நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது.ஒருவன் உங்களைப் புகழும்போது,அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான்.அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்,நீங்கள்தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும்,நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

00000000000000000000000000000

வாழ்க்கை ஒரு பரிசு.

வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது ஒரு பரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா விட்டால் அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.

வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,’நான்யார்?’என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன. நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை –இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.

000000000000000000000000

புனித நூல் எது?

இதுவரை இருந்தமனிதன் நிறைய வேதனைப்பட்டு விட்டான்.அவன் அவலத்தில் வாழ பழக்கப் பட்டிருக்கிறான்.துன்புறுவதிலும் சுய சித்திரவதையிலும் அவன் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறான்.அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன.சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.எத்தனை வேதனை அவன் படுகிறானோ,எந்த அளவுக்கு அவன் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.இது சிலரின் சுயநலன்களுக்கு சாதகமாக இருந்தது.துன்புறும் மனிதனை அடிமைப் படுத்துவது சுலபம். அறியாத வருங்காலத்துக்காக தனது இன்றைய வாழ்வைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன்,தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன் அவன்..காலம் காலமாக அவன் வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான். கற்பனைகளிலும்,கனவுகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர,யதார்த்தத்தை அவன் கண்டதில்லை.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு கட்டுப் படுத்தப்பட்ட கும்பலில்தான் பிறக்கிறது. ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,அண்டை அயலார் அனைவரும் கட்டுப் பட்டவர்களே.ஒரு சின்னக் குழந்தை ஆதரவற்றது.அதற்கு அந்தக் கும்பலுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறு வழி இல்லை. பழையது சாகட்டும்;புதியது பிறக்கட்டும்!

புனித நூல் உன் வாழ்க்கைதான்.அதை உன்னையன்றி வேறு யாரும் எழுத முடியாது.நீ வெற்றுத்தாளுடைய புத்தகத்துடன் வந்தாய்.அதில் நீ என்ன எழுதுகிறாய் என்பதுதான் முக்கியம்.பிறப்பு மட்டும் வாழ்வல்ல.அது வாழ்வை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகும்.நீங்கள் நேசிக்கக் கூடிய அளவு ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

000000000000000000000000000

துன்பம் நிரந்தரமாய் நீங்க…

துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

00000000000000000000000

புத்திசாலித்தனம்

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.

 

நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்.

00000000000000000000000

இன்பம் யாவுமே..

நீங்கள் இன்பமாகக இருக்கும்போது இதற்கு முன் துன்பமாக இருந்தீர்கள் என்பதை மறந்து விடுகிறீர்கள்.மீண்டும் துன்பம் தொடரும் என்பதை மறந்து விடுகிறீர்கள்.நீங்கள் துன்பமாக இருக்கும்போது முன்பு இன்பமாக இருந்ததை மறந்து விடுகிறீர்கள்.இனி இன்பம் தொடரும் என்பதையும் மறந்து விடுகிறீர்கள். இன்பம் வரும்போது அதில் மறைந்துள்ள துன்பத்தைத் தேடுங்கள்.துன்பம் வரும்போது அதில் எங்கோ மறைந்திருக்கும் இன்பத்தைத் தேடுங்கள்.பிறகு உங்களுக்கு உண்மை நிலை புரியும்.இன்பமும் துன்பமும் வெவ்வேறு விசயங்கள் அல்ல.அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.வெளியே தெரியும் விசயத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து விடாதீர்கள்.

ஒருவன் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றி அதிகமாகச் சொல்ல முற்பட்டால் அவனுள் அதற்கு எதிரான விசயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.அவன் அவனையே திருப்திப் படுத்திக் கொள்கிறான்,உங்களை அல்ல.

பிரார்த்தனை செய்வது கடவுளுக்கானது அல்ல.பிரார்த்தனை உங்களுக்காகத்தான் இருக்கிறது.நீங்கள் பிரார்த்திக்கிரீர்கள்.இதன் மூலம் நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள்.உங்கள் பிரார்த்தனையை யாரும் கேட்பதில்லை.யாரும் அதைக் கெட்டு உதவப் போவதில்லை.ஆனால் அதன் மூலம் உங்கள் உள்ளம் மாற்றம் அடைகிறது.உங்கள் பிரார்த்தனை உண்மையாக இருக்குமேயானால்,நீங்கள் அதன்மூலம் நீங்கள் வித்தியாசம் ஆனவராக ஆகிறீர்கள்.உங்கள் உறுதிப்பாடு உங்கள் பிரார்த்தனை நிறைவேறக் காரணமாகிறது.

000000000000000000000

திருடன்

பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம்.இதுதான் நமக்குள் இருக்கும் திருடன்.அந்தத் திருடனோடு நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது.திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம்.ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான்.அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம்.ஆனால் முடியவில்லை.வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம்.நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம்.திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம்.புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது.ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர்.குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள்.காமவயப்பட்டவரே பாலுறவைக் கண்டித்துப் பேசுவர்.நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும். ”ஒருவன், ‘திருடன்,திருடன்,விடாதே பிடி,’என்று கத்தினால், அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்” என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார்.நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம்.எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும்போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.நமக்குள் ஏற்படும் போராட்டமே இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது.நமக்குள் முரண்பாடு தோன்றாதபோது,போராட்டம் இல்லாதபோது இன்னொருவர் மீது பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று விடுகிறது.மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது.ஆனந்த நடனமே அமையும்.மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது.

000000000000000000000000000

தந்திர மனது

நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார்.என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.”நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ அப்படியே இருக்கலாம்.நீங்கள்நம்பும் கடவுள்தான் உண்மையான தகப்பனார்.அவருக்கு எல்லாம் தெரியும். அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.”இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது?இந்த மனம் எவ்வளவு தந்திரமானது!இந்தக் ‘கடவுள்’ உங்கள் தந்திர மனதின் வேலைதான்.ஞானி சாரஹா,”நம்பிக்கை என்பது உண்மை இல்லை.உண்மை நம்பிக்கை ஆகாது.உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,”என்கிறார்.

சில சமயம் நீங்கள் உடலால் ஏமாற்றப் படுகிறீர்கள்.எப்படியோ முயற்சி செய்து உங்கள் உடலைவிட்டு நீங்கள் தாண்டிச் சென்றால் மனத்தால் மயக்கப்படுகிறீர்கள்.இது மிகவும் தந்திரமானது.மிக மோசமாக ஏமாற்றக் கூடியது.உங்களுடைய நம்பிக்கை இல்லாமலேயே உண்மை வேலை செய்யும்.நம்பிக்கையின் மூலம் பொய் தான் வேலை செய்யும்.இந்தப் பொய்மைக்கு உங்கள் நம்பிக்கை தேவைப் படுகிறது.

0000000000000000000000000

கும்பல்

குருட்ஜீப் கூறுகிறார்,”நீ ஒரு தனி ஆள் அல்ல.நீ ஒரு கும்பல்தான்.’நான்’என்று கூறும்போது கூட அங்கு ஒரு ‘நான்’ இல்லை.பல ‘நான்கள்’உனக்குள் இருக்கிறார்கள்.காலையில் ஒரு நான்.மதியம் ஒரு நான்.மாலையில் ஒரு நான்.இந்தக் குழப்பத்தை ஒரு போதும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அதை உணரும்படியான மையம் உன்னிடம் இருப்பதில்லை.”

கும்பலாக இல்லாமல் தனி நபராக இருக்கும்போது மட்டுமே அமைதி சாத்தியம்.நீங்கள் ஒரு கும்பல்.ஒரு கும்பலானது எந்தக் கணத்திலும் கலைந்து சிதறிவிட முடியும்.என்ன நேர்ந்தாலும் இருந்த இடத்திலேயே இருக்கிற ஒரு பாறையைப் போன்ற ஒன்று உங்களிடம் இல்லை.எனவே பாறையாக இல்லாமல் பலமான அடித்தளம் இல்லாமல் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அடித்தளமற்ற வீடு எப்போதும் அச்சத்தில்தான் இருக்கும்.லேசான காற்று கூட உங்களை அசைத்து அழித்து விட முடியும்.எனவேதான் உங்களை நீங்களே காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.இந்த ஓயாத தற்காப்பின் காரணமாகத்தான் உங்களால் அன்பு செய்ய முடியவில்லை.நட்பாக இருக்க முடிவதில்லை.நண்பர்கள் பலர் இருக்கலாம்.ஆனால் நட்பு இருப்பதில்லை.யோக ஒழுங்குகள் அனைத்தும் உங்களையே உங்கள் அதிகாரியாக ஆக்கும் பொருட்டான ஒரு முயற்சிதான்.

00000000000000000000000000

சுதந்திர மலர்

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது,தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ,அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான்.அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது.ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.அவன் பிறரைச் சார்ந்து இல்லை.அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும்,அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில்,யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில்,அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய,பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் ,ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும்.அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது.அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும்.ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.பிறகு ,நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள்.வழி தேடுகிறீர்கள்.ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார்.பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள்.அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்?அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர். இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

00000000000000000000000

மகிழ்ச்சி

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது.பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது.மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது.ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது.வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான்.ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது.கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது.மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும்.கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை.அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது. கோபப்படாதே என்று சொன்னால் அவன் புன்னகை புரிவான்.அந்த புன்னகையோ போலியானது.உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை,வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது.பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை.பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி,அப்பாவை நேசி,என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது.தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன.பற்று என்பது உறவுமுறை.அன்பு என்பதோ ஒரு மனநிலை.

00000000000000000000000000

நரகம்

நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?

ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா,இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?ஒரு மலரின் அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது.பசி!இசையைப் பற்றியோ,கவிதை பற்றியோ,ஓவியம் பற்றியோ பசித்தவனிடம் பேச முடியாது அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும்.

உச்சியில் நிற்பவர் ஒரு வகையில் பலவீனமானவர்.பற்றிக் கொள்வதற்கு தலைக்குமேல் அவருக்கு எதுவும் இல்லை.அதே சமயம் அவருக்குக் கீழே இருப்பவர்களோ,எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கவிழ்த்து விடக் காத்திருக்கிறார்கள்.அப்படிச் செய்தால் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்குமே!அதனால் உச்சியில் இருப்பவர் எல்லாவிதமான குற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது.

மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை.தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல.அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.

உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான்.ஒரு காரோட்டி போலத்தான்.காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா?

0000000000000000000000000000000

பலி

குயவன் ஒருவன் மண் பாண்டங்கள் செய்து கொண்டிருந்தான்.அவன் வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.அந்த வழியே துறவி ஒருவர் வந்தார்.துறவியை வணங்கி அந்தக் குயவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.பின் அவர் விடை பெறும்போது குயவன் சொன்னான், ”ஐயா,தயவு செய்து இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்லுங்கள்.இங்கு நாளை எங்கள் குல தெய்வத்தினை வணங்குகிறோம்.விழா சிறப்பாக இருக்கும்.விழாவில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டினை பலி கொடுத்து பூஜை செய்யப் போகிறோம்.”துறவி சற்றும் எதிர்பாராத நிலையில்.குயவனின் பானை ஒன்றினை எடுத்து ஓங்கித் தரையில் அடித்து உடைத்தார்.பானை துண்டு துண்டாகச் சிதறியது.குயவன் அதிர்ச்சி அடைந்தான்.அவனால் பேசக் கூட முடியவில்லை.துறவிக்குப் பைத்தியம்பிடித்திருக்குமோ என்று அஞ்சினான். துறவி அவனைப் பார்த்து,”இந்த உடைந்த துண்டுகளை எடுத்துக் கொள்.அவை எல்லாம் உனக்குத்தான்.”என்றார்.குயவன்,”என் பானையை உடைத்து எனக்கே தருகிறீர்களா?”என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி,”கடவுள் படைத்த ஒரு உயிரைப் பலியிட்டு கடவுளுக்கே கொடுக்கப் போகிறேன் என்கிறாயே! அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றால்.இந்த உடைந்த துண்டுகளை நீ ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது?”என்று கேட்டார்.குயவன் பேச வழியின்றி வாயடைத்து நின்றான்.

00000000000000000000000000000000

உனக்கென்ன வேலை?

ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,”நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!”

கடவுள் சொன்னார்,”பிறந்து கொள்,”

பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,”நான் வளர வேண்டுமே!”

கடவுள் சொன்னார்,”வளர்ந்து கொள்.”

வளர்ந்த குழந்தை கேட்டது,”நான் படிக்க வேண்டுமே!”

கடவுள் சொன்னார்,”படித்துக் கொள்.”

படித்த பையன் கேட்டான்,”எனக்கு நல்ல வேலை வேண்டுமே?”

கடவுள் சொன்னார்,”தேடிக் கண்டுபிடி,”

வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,”எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!”

கடவுள் சொன்னார்,”நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.”

திருமணம் ஆனதும் கேட்டான்,”நல்ல குழந்தை வேண்டுமே!”

கடவுள் சொன்னார்,”பெற்றுக் கொள்.”

வயதானபின் அவன் கேட்டான்,”நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,”

கடவுள் சொன்னார்,”இறந்து கொள்.”

அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,”ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?”

கடவுள் புன்னகையுடன் சொன்னார்,”இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.”

00000000000000000000000

கடவுளைப்பற்றி

புத்தரிடம் ஒரு கற்றறிந்த பிராமணர் கடவுளைப்பற்றிக் கேட்டார்.புத்தர் பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார்.இதைப் பார்த்த அவர் சீடர் ஆனந்தனுக்கு ஏமாற்றம்.ஏனெனில் அந்த பிராமணருக்கு சீடர்களின் எண்ணிக்கை அதிகம்.அவர் மட்டும் பௌத்த மதத்திற்கு மாறி விட்டால் அவரைப் பின்பற்றி ஆயிரக் கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறி விடுவார்கள்.ஆனால் புத்தர் மௌனமாகவே இருந்தார்.சிறிது நேரம் கழித்து அந்த பிராமணர் புத்தரை வணங்கி நன்றி தெரிவித்து விட்டு போய் விட்டார்.அவர் போனபின் ஆனந்தன் புத்தரிடம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்து விட்டதாகக் கூறி வருத்தப்பட்டார்.புத்தர் சொன்னார்,”ஒரு நல்ல குதிரைக்கு சாட்டையின் நிழலே போதுமானது.அந்தக் குதிரையை சாட்டையினால் அடிக்க வேண்டியதில்லை.அவர் மன மாற்றம் அடைந்துவிட்டார்.”ஆனால் ஆனந்தனுக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை.ஆனால் மறுநாள் காலை அந்த பிராமணர் ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்தரிடம் வருவதைப் பார்த்த ஆனந்தனால் நம்ப முடியவில்லை.அவர் அன்று இரவு புத்தரிடம்,”இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது?நீங்கள் கண்களை மூடி மௌனமாக இருந்தது அவரை அவமதிப்பதுபோல நான் உணர்ந்தேன்.ஏனென்றால் அவர் முக்கியமான கேள்வி கேட்டு நீங்கள் சரியான பதில் சொல்ல மறுத்து விட்டீர்களே?”என்று கேட்டார்.புத்தர் சொன்னார்,”இந்த மௌனம் ஒரு சூட்சுமமான பதில் ஆகும்.அது அவருக்குத் தெரியும்.கடவுளைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது.நான் ஏதாவது சொல்லியிருந்தால் என் மீது நம்பிக்கை இல்லாது அவர் போயிருப்பார்.ஏனென்றால் நான் சொல்லும் கடவுள்,கடவுளே அல்ல என்பதையே காட்டியிருக்கும்.அதனால்தான் நான் என் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தேன்.கண்களைத் திறந்திருந்தால் கூட கண்களின் மூலம் நான் எதுவோ சொல்ல வருகிறேன் என்று அவர் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும்.எனவே என் மௌனம்தான் சரியான பதில்.அதை அவரும் ஏற்றுக் கொண்டார்.”

0000000000000000000000

புதியவினை

புத்தர் ஞானமடைந்தபின் அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான்.அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான். .ஆனால் எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான்.ஆனால் அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,கண்களை மூடிக் கொண்டது.சிலர் புத்தரைக் கேட்டார்கள்,”தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.ஆனால் நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?”புத்தர் சொன்னார், ”என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன. கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.இது அவனுடைய செயல் அல்ல.அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன். அப்படியில்லை என்றால் அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால் மீண்டும் ஒரு சங்கிலி உருவாகிவிடும்.என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.நான் இனி ஒரு புதிய சங்கிலியை,வினையை,கர்மத்தை எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.”

0000000000000000000000000

ஒளி சென்றதெங்கே?

சூபி ஞானி ஒருவர் ஒரு மாலை வேளையில் ஒரு கிராமத்துப் பக்கம் சென்று கொண்டிருந்தார்.ஒரு குழந்தை எரிந்து கொண்டிருந்த கை விளக்கோடு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது.அந்த ஞானி குழந்தையை நிறுத்திக் கேட்டார்,”இந்த விளக்கின் ஒளி எங்கிருந்து வந்தது?நீதானே விளக்கேற்றினாய்?”குழந்தை பதில் அளித்தது,”நான்தான் விளக்கேற்றினேன்.ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது.”பின் அந்தக் குழந்தை விளக்கைத் தனது வாயால் ஊதி அணைத்தது. அது ஞானியிடம்,”இப்போது உங்கள் முன்னர்தான் ஒளி மறைந்து விட்டது.இப்போது சொல்லுங்கள்,ஒளி எங்கே சென்றது?இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் நான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.”என்று கேட்டது.திகைத்துப் போன ஞானி அக்குழந்தையின் காலில் விழுந்தார்.இனி யாரிடமும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதில்லை என்று உறுதி அளித்தார்.அக்குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒளி சென்ற இடம் தனக்குத் தெரியாது என்றார்.தான் பதில் அளிக்க முடியாத கேள்வியைப் பிறரிடம் கேட்பது முட்டாள்தனம் என்பதனை உணர்ந்தார்.பின் அவர் கூறினார்,”விளக்கை விடு.அதற்கு மேலாக எனக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறாய்.என் விளக்கில்(உடல்)ஒளி வருவது எங்கிருந்து என்று எனக்குத் தெரியாது.அது எங்கு மறையும் என்பதும் தெரியாது.என் விளக்கைப் பற்றி முதலில் நான் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.பின் இந்த மண் விளக்கின் ஒளியைத் தேடுகிறேன்.”

000000000000000000000000

காய்ந்த இலை

ஞானம் தேடி ஒரு பெண் சமண ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தாள்.அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக”நீ உன்னையே உணர்வாயாக”என்றனர்.அது அவளுக்குப் பிடிபடவில்லை/அவளுக்கு எப்படி போதிப்பது என்று அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை.ஒருநாள் அவள் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தபோது காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டாள்.அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தாள்.அவள் ஞானம் அடைந்து விட்டாள் .ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள்,”என்ன படித்தீர்கள்?எந்த சாத்திரம் கற்று நீங்கள் ஞானம் அடைந்தீர்கள்?அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.நீண்ட காலமாக நாங்களும் என்னென்னவோ படித்தும் ஞானம் அடைய முடியவில்லை. ஆனால் நீங்கள் குறுகிய காலத்தில் எதையும் படிக்காமலேயே ஞானம் அடைந்து விட்டீர்களே!”என்று கூறி ஆச்சரியப்பட்டனர்.அந்தப் பெண் சொன்னாள்,”எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை.மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன்.என் ஆசை நிறைவேறி விட்டது,”மற்றவர்கள் சொன்னார்கள்,”நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம்.அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?”அவள் சொன்னாள்,”ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ கீழே விழுந்தது.இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப்போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.பின் எதற்குப் பெருமை,கர்வம் எல்லாம்?காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லா திசைகளிலும் மாறி மாறி அடித்துச் செல்வதைக் கண்டேன்.நாளை அது சாம்பலாகிவிடும்.நானும் அந்த இலையைப் போன்றே அலைவேன்.இன்றிலிருந்து நான் இங்கில்லை.இதை அந்த காய்ந்த இலையிலிருந்து கற்றுக் கொண்டேன்.”

0000000000000000000000

கண்ணாடி

மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.குரு அவனிடம், ”இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,”என்றார். அவனும்,”மக்கள் போய் வருகிறார்கள்,”என்றான். குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,”இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,”என்றார். அவனும் பார்த்து விட்டு,”என் முகம் தெரிகிறது,”என்றான்.’ ‘மக்கள் யாரும் தெரியவில்லையா?”என்று குரு கேட்க அவன் இல்லை என்றான். இப்போது குரு சொன்னார்,”இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது. நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும். அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும். பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி,”

000000000000000000000000000000

There is no gain without pain.

ஒரு சிப்பி இன்னொரு சிப்பியிடம் சொன்னது,”ஐயோ,என்னால் வலி தாங்க முடியவில்லையே!”இரண்டாவது சிப்பி காரணம் கேட்க முதல் சிப்பி, ”என்னுள் ஒரு கனமான உருண்டைப் பந்து ஒன்று சுழல்வது போல இருக்கிறது.அதனால் ரொம்பவலி.”என்றது.இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.மிகுந்த பெருமையுடன் அது கூவியது,”நல்ல வேளை,எனக்கு அப்படி எந்த வலியும் ஏற்படவில்லை. நான் நலமுடன் உள்ளேன்.இறைவனுக்கு நன்றி.”சிப்பி இரண்டும் பேசிக் கொண்டிருந்ததை ஒரு நண்டு கேட்டுக் கொண்டிருந்தது .அது இரண்டாவது சிப்பியிடம் சொன்னது,”உனக்கு தற்போது எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம்.உன் நண்பனை சிரமப்படுத்தும் அந்த வலி,இன்னும் சில நாட்களில் ஒரு அழகான முத்தை உருவாக்கும்.வலியைத் தாங்க விரும்பாத நீ எப்போதும் இப்படி வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான்.”

இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர். இருவரில் ஒருவருக்குத்தான்.நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்.சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான். அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்.திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,”உனக்கு நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?” இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத் தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,”இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது.நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில் அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.”

மன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன்.அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,”இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.”அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்?”என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,”என்னைப் போல எப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்?”என்று கேட்டான்.என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.” பின்னர் அவன் என்னிடம்,”நீ இங்கே எப்படி வந்தாய்? என்னைப் போல்தானா?” என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான் வந்திருப்பதாகக் கூறினேன்.அவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்,”ஓஹோ,அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா?”

ஒரு நதி கடலில் கலப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தது.அதில் இருந்த இரண்டு நீரோடைகள் தமக்குள் பேசிக் கொண்டன.முதல் ஓடை அடுத்ததிடம் கேட்டது,”நண்பா,உன் பயணம் நல்லபடியாக இருந்ததா?” இரண்டாம் ஓடை சொன்னது,”அதை ஏன் கேட்கிறாய்.நான் வந்த வழி மிக மோசமாக இருந்தது. சரியான வழி நடத்துபவர் இல்லாமல், கண்ட பாதைகளில் பல சோம்பேறி மனிதர்களைக்கடந்து வந்தேன்.அது சரி,உன் பயணம் எப்படி இருந்தது?”முதல் ஓடை சொன்னது,”நான் வந்த பாதை எங்கும் ஒரே சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம். மலைப்பாதையில் நறு மணம் மிக்க மலர்களையும் மரங்களையும் கடந்து வந்தேன்.அழகிய ஆண்களும் பெண்களும் என் நீரை அள்ளிக் குடித்தார்கள். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தார்கள்.”இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நதி அதட்டலாக சத்தம் கொடுத்தது,”என்ன சலசலப்பு அங்கே?எல்லோரும் பேசாமல் என்னோடு வாருங்கள்.நாம் இப்போது பெரிய கடலில் கலக்கப் போகிறோம்.இனி எதுவும் பேசாமல் என்னோடு வந்தாலே போதும்.கடலுக்குள் கலக்கும்போது நம்முடைய பழைய அனுபவங்களோ, மகிழ்ச்சிகளோ,வருத்தங்களோ,சலிப்புகளோ எதுவும் ஞாபகம் இருக்கப் போவதில்லை.நம் கடல் அன்னையின் இதயத்தை அடைந்தபின் நாம் எல்லோரும்சமம்தான்.”

நான் ஒருதுறவியை சந்திக்க சென்றபோது அங்கு ஒரு திருடன் வந்தான். களைத்திருந்தாலும் துறவியை திருடன் பார்த்ததும் பரவசத்துடன் அவர்முன் மண்டியிட்டு,”ஐயா,நான் செய்த பாவங்கள் பெரும் பாரமாக என்னை அழுத்துகின்றன.என்னைக் காப்பாற்றுங்கள்.”என்றான்.துறவி புன்னகை புரிந்தவாறே,”மகனே,நானும் பாவங்கள் செய்துள்ளேன் .அவை என்னையும் அழுத்துகின்றன.”என்றார்.திருடன் முகத்தில் அதிர்ச்சி.அவன் பதட்டத்துடன் சொன்னான்,”ஐயா,அப்படியெல்லாம் பேசாதீர்கள்.நீங்களும் நானும் ஒன்றா? நான் ஒரு திருடன்;பொல்லாதவன்.”உடனே துறவி, ”மகனே, நானும் ஒரு திருடன்தான்;பொல்லாதவன்தான்.”என்றார்.திருடன்,”ஐயோ,நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை.நான் ஒரு கொலைகாரன்.நான் கொலை செய்தவர்களின் கதறல் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.” என்றான்.துறவி,”நானும் கொலைகாரன் தான்.உன் அனுபவம் எனக்கும் உள்ளது,”என்றார்.இதைக் கேட்ட திருடன், ஆச்சரியத்துடன் எழுந்து நின்றான்.பின் அவன் நடையில் ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வெளியே சென்றான்.அவன் பார்வை மறைந்ததும் நான் துறவியிடம் ,”ஏன் இப்படி நீங்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்ததாக சொன்னீர்கள்?அவனுக்கு வரும்போது உங்கள் மீது இருந்த மரியாதையும் நம்பிக்கையும் போய் விட்டன மறுபடியும் அவன் தறுதலையாகத் திரியப் போகிறான்,”என்றேன்.துறவி மெலிதாகப் புன்னகைத்தவாறே சொன்னார்,”மகனே அவனுக்கு என் மீது நம்பிக்கை போய் விட்டது என்பது உண்மைதான்.ஆனால் அவன் இங்கு வரும்போது இருந்ததை விட அதிக மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் திரும்ப சென்றிருக்கிறான்.”அப்போது தூரத்தில் எங்கோ,அந்தத் திருடன் பாடிய பாடலிலிருந்த மகிழ்ச்சி அந்த மலையையும் பள்ளத்தாக்கையும் நிறைத்தது.

சாலையில் ஒருவன் குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தான் அப்பக்கம் ஒரு தத்துவஞானி வந்தார்.அவர் அவனைப் பார்த்து,”ஐயோ பாவம்,உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.உன் வேலை மிகக் கடினமானது.அசிங்கமான வேலையும் கூட,”என்றார்.அதை ஒப்புக் கொண்ட அவன்,”ஐயா,என் மீது பரிதாபம் காட்டியதற்கு நன்றி.அது சரி,நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?”என்று கேட்டான்.தத்துவ ஞானி சொன்னார்,”நான் மனிதர்களைப் படிப்பவன்.அவர்களின் மனதையும் அவர்களுடைய செயல்களையும் அவர்களின் ஆசைகளையும் படிக்கிறேன்,”இதைக் கேட்டதும் அந்த ஆள் மெல்ல சிரித்தபடி தனது வேலையைத் தொடர்ந்த வண்ணம் சொன்னான்,”நீங்களும் பாவம்தான் ஐயா.நானும் உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன்.”

மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களும்,அவனது செயல்களும் ஆசைகளும் அவ்வளவு மோசமான குப்பைகள்!

June 16, 2014

(Visited 1 times, 1 visits today)