சுவைத்(தேன்)-கவிதைகள் பாகம் 02

நிலாந்தன் கவிதைகள் 

01 ஒரு புது ஆயிரமாண்டு

மூன்றாவது ஆயிரமாண்டு
அது அநேகமாக எங்களுடையது
எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில்
அது பிறந்து வளர்ந்தது
ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும்
அது மீண்டெழுகிறது
மீட்பின் ரகசியமென.
இனி அறிவேயெல்லாம்
அறிவே சக்தி
அறிவே பலம்
அறிவே ஆயுதம்
புத்திமான் பலவான்
வருகிறார் மீட்பர்
பரசேயரும் சதுசேயரும் பரபரக்கிறார்கள்
அவர்கள் பழைய யுகத்தவர்கள்
நாங்கள் அகதிகளாயிருந்தபோது
அந்தரித்துத் திரிந்தபோது
யாருக்கும் தெரியாமலே
மூன்றாவது ஆயிரமாண்டு
கர்ப்பத்திலுதித்தது
பரசேயருக்கும் சதுசேயருக்கும்
இது தெரியாது
அவர்கள் மீட்பருக்காக
அந்தப்புரங்களில் காத்திருக்கிறார்கள்
ஆட்டுத்தொழுவத்தில்
அற்புதங்கள் நிகழுமென்று
அவர்களுடைய வேதப்புத்தகங்களில்
சொல்லப்படவில்லைப் போலும்
சிலுவையும் சவுக்குமன்றி
முள்முடியும் வெறுப்புமன்றி
வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது
அறிவு கனிந்தெழும் போது
அதனொளியில்
எரிந்து சாம்பலாகப் போகும்
அற்பப் பூச்சிகளாயிருக்கிறார்கள்
அறிவு சக்தியாகத் திரண்டு
யுகங்களையும் உலகங்களையும்
ஜெயிக்க வரும் வேளை
அவர்கள் குருடராயும் செவிடராயுமிருப்பார்கள்
குழந்தை நூற்றாண்டின் நற்செய்தி
அவர்களைச் சென்றடையாது
அதோ
இப்பாழுதுமவர்கள்
கள்ளத்தீர்க்கதரிசிகளின் பின்னே
திரிகிறார்கள்
அவர்கள் போகட்டும்
நரகத்துக்கே போகட்டும்
சிங்கங்களே வாருங்கள்
சிங்கங்களே சிங்கங்களைச் சேருங்கள்
புண்ணிய நதிகளில் குளியுங்கள்
சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்
பாவியாடுகளே தப்பியோடுங்கள்
பொய்த்தீர்க்க தரிசிகளே
நரகத்துக்குப் போங்கள்
புதுயுகம் வருகிறது
ஒரு புது ஆயிரமாண்டு பிறந்து விட்டது

08.09.2K
மல்லாவி

02 நந்திக்கடல் – 2012 ஆவணி

மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே,
மாமிசத்தாலானதும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தையும் சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காததுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகாததும்
துருப்பிடிக்கக் கூடியதுமாகிய
இரும்பையெல்லாம் சேகரித்து
உப்புக்களியில்
குவித்து வைத்திருக்கிறார்கள்.
உப்புக்களியில்
இருபோக மழையில்
துருவேறிக் கிடக்கிறது
கனவு.
காடுகளின் சூரியன்
நந்திக் கடலில்
உருகி வீழ்கிறான்.
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகாத்திருக்கிறது.
2012 – ஆவணி, யாழ்ப்பாணம்.

நன்றி ஆனந்தவிகடன்

உப்புக்களி – கடைசி யுத்தம் நிகழ்ந்த மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிராமங்களிற்கும், கடலேரிக்கும் இடைப்பட்ட உப்புச்செறிவானகளி மண் தரை.
கானாங்கோழி – நீர்க்கரைகளில் வளரும் சிறு பற்றைக் காடுகளில் வசிக்கும் ஒரு வகைச் சிறு பறவை

0000000000000000000000000000

கருணாகரன் கவிதைகள் 

03 பல்லக்கு

ரஜனிகாந் முப்பது பேரை
வெழுத்து வாங்குகிறார்
சிவாஜி வெற்றிப்படமா தோல்விப்படமா
யாருக்குத் தெரியும்
பிம்பத்துக்கு வெளியே
ரஜனி
சந்நியாசியா அரசியல்வாதியா

யாருக்குத் தெரியும்
அவருக்கே தெரியுமா

அடையாளங்காணப்படாத பிணத்தின் அருகில்
பாணுக்கு கியூவில் நிற்கிறேன்
இலையான்கள் பிணத்திலும் மொய்க்கின்றன
என்னிலும் மொய்க்கின்றன
பாணிலும் மொய்க்கின்றன

தேவனே
அந்தோனியார் கோவிலில்
பின்னேரங்களில்
செபம் சொல்ல வரும்
திரேசம்மாக்கிழவி இரண்டு நாளாக வரவில்லையே
அவளுடைய பேரனை
யார் கடத்திச் சென்றது
அவள் ஏன் தேவனிடம் முறையிடவரவில்லை
கடலில்
காணாமற்போன புதல்வனை
கைவிட்டதைப்போல
இப்போதும் தேவன்
பேசாதிருந்துவிடக்கூடுமென்று நினைத்தாளா

2007.08.16

ஒரே நாளில் முன்னூறு ரூபாய் விலையேறியது
ஒரு லீற்றர் பெற்றோல்
அப்படியென்றால்
இப்போது என்னவிலை என்று கேட்டான்
விருந்தாளி
அவனுக்கு விலை சொல்லிக்கொண்டிருக்கும்போதே
ஏறியிருந்தது
இன்னும் நூற்றம்பது ரூபாய்

இதை எழுதிமுடிப்பதற்கிடையில்
எண்ணூற்றம்பது ரூபாயாகிவிட்டது
அது

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை
ஒரு நாளில்
இப்படி ஏறுகிறது

எவருடைய குருதிக்கும்
இந்த விலையில்லை
எவருடைய கண்ணீருக்கும்
இந்த மதிப்பில்லை

ஒரு அரேபியன் அறிவானா
தன்னுடைய நிலவூற்று
இப்படி
எல்லைக் கோடுகளைத்தாண்டி
பகிரங்கமாக விலைபோவதை

அகதிக்கூடாரங்களே நிரந்தரமாகிவிட்ட
பலஸ்தீனத்தில்
குண்டுகள் வெடிக்கின்றன
ஈராக்கிலும்
பாகிஸ்தானிலும்
பொலிகண்டியிலும் குஞ்சுக்குளத்திலும்
குண்டுகள் வெடிக்கின்றன
சனங்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஓலம்
குருதி கொப்புளிக்கும்
சாவோலம்

தலைப்புச் செய்திகள்
செய்தி விவரணங்கள்
ஆய்வுகள்
புள்ளி விவரங்கள்
குண்டு வெடிப்புகள் பற்றி
கொலைகள் பற்றி
பி.பி.ஸி, சி.என்.என், அல்ஜஸீரா மற்றும்
எல்லா அலைவரிசையிலும்

நெருப்பு
புகை
குருதி
கொலை

ஆனால் எதையும் பச்சையாகக் காட்டாதே
பச்சையாகக்  கொல்
உயிரோடு எரி
மரணத்துக்கு உயிரூட்டு
ஆனால் எதையும் அப்படியே காட்டாதே

பசியால் வாடுகிற குழந்தைகளைப்பற்றி
வீடில்லாமல்
தெருநீளம் அலைகின்ற மனிதர்களைப்பற்றி
எதையும் சொல்ல முடியாமல்
தொண்டைக்குழி பெருத்த
அறிஞரைப்பற்றி
யாருக்கும் தெரியவில்லை
அதைப்பற்றியெல்லாம் யாருக்கும் தேவையில்லை

சிவாஜி படத்தை பத்தாவது தடவையாக
இழுபட இழுபட
பார்த்துவிட்டு
துக்கக்கலக்கத்தோடு
பியரடிக்கப்போகிறார்கள் பள்ளிப்பிள்ளைகள்

துவக்கைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள்
சென்றிக்கு
போராளிகள்

சிவாஜியை
முறைபோட்டு பார்க்கிறார்கள்
படைச்சிப்பாய்கள்

நாங்கள் மட்டும் தலையிலடித்து
கதறியழுது
நதி பெருகுமா
கானல் தீருமா

04 இரத்தக் கிடங்கு

பெருங்கிடங்கினுள்ளே காத்திருந்தது
ரத்த நிறத்திலொரு நிழல்

ஆயிரமாயிரம்
தலைகளை கொண்டுபோகும்
இந்த நாட்களில்
கறுத்திருக்கும் வெயிலுக்குள்
கொப்பளிக்கிறது
இரத்தப் பெருக்கு.

சாவின் புன்னகையைக் கண்டேன்

அழிவின் காலம்
தீர்க்கதரிசிகளைக் கசையலாடித்தபின்
வெளியே துரத்துகிறது

முள்முடிகளின் அலங்காரம்
இதோ
இதோ

நெருங்கிவரும் அபாயத்தின்
கரு நிழலுள்
விருந்துக்காகச் செல்லும்
வீரர்களை விலகினேன்

பனை மரங்களுக்குக் கீழே
செத்துக்கிடந்தன
நாறிய பிணங்கள் நூறுக்கு மேல்
யாருடையவை
யாரறிவார்
தெரிந்த முகங்களை எப்படிவிலக்குவது

‘பொன்னாய் மின்னிய மண்ணில்
பூவாய் உதிர்ந்து போகிறது
துளிராயிருந்த உயிரெல்லாம்’
என்றொருத்தி பாடுகிறாள்

புரக்கேறிவரும் அவளுடைய பாட்டில்
தீராத சாபத்தையும்
வசையையும்
ஆற்ற முடியாக் கோவத்தையும்
இறக்கினாள்
இரத்தப் பெருக்காக.

05 தேவசுலோகம்

‘பிள்ளை பெறாதோரும்
பால் கொடாதோரும்
மகிழ்ந்திருக்கும் காலமிது’
என்று சொல்கிறான் தீர்க்கதரிசி

தீர்க்கதரிசிக்கு வழிகாட்டியானது
தேவசுலோகம்

அவன் விரும்பாத விருந்தில்
அவன் விருந்தாளியாக்கப்பட்டான்

அவர்களுடைய ஒப்புதலின்றியே
அவர்கள் விருந்தாளிகளாகவும்
பரோபகாரிகளாகவும் ஆக்கப்பட்டனர்.

கட்டளைகள்
கட்டளைகள்
பெருங்கை கொண்ட கட்;டளைகள்
வானத்தையும் மூடின

வழித்தேங்காய்
தெருப்பிள்ளையார்
அடியடா அடி
நடத்தடா நடத்து
இப்போது தெருவும் உனது
தேங்காயும் உனதே
பிள்ளையாரும் உனக்கே
அரோகரா அரோகரா
உனக்கும் அரோகரா
தேங்காய்க்கும் அரோகரா
தெருவுக்கும் அரோகரா
அரோகரா அரோகரா

பிள்ளையுடையோரெல்லாம்
பலிபீடத்தில்
பலிபீடமோ குருதிச் சேற்றில்

மயான நினைவுளோடு தெருநிறையச் சனங்கள்
வீடுகளிலும் கரு நிழலாய்
படிந்திருக்கிறது கல்லறை ஞாபகம்

பிள்ளை பெறாதோரும்
பிள்ளையில்லாதோரும் கூடவே
மயானக் கரையில்
மயானத்தின் நடுவில்

அரோகரா அரோகரா
எனக்கும் உனக்கும் எல்லோருக்கும்
அரோகரா

‘எல்லாக் கட்டளைகளுக்கும் ஒரு மயானமுண்டு’
எல்லா நிம்மதியின்மைக்கும்
முடிவுப்புள்ளியுண்டு
அரோகரா அரோகரா என்று யாரோ ஒருவர்
புலம்பிப்போகிறார்.

இது ஆற்றுமோ
காயப்பட்ட தேசத்தின்
ஆன்மாவை
தோற்கடிக்கப்பட்ட வாழ்வின்
தீராத்துயரை

வேரோடுகிறது
அகதி வாழ்க்கை சொந்த நிலத்தில்
கண்ணீருக்குள்

எல்லாவற்றுக்கும் என்னவழி
எல்லாவற்றுக்கும் என்னவழி

வழியுடையோரே சொல்லுங்கள்
புலம்பல் ஒரு வழியைத் தருமெனில்
கதறலும்
மண்டியிடுதலும்
ஒரு வழியைத்தருமெனில்
மண்டியிடுங்கள்
கதறுங்கள்
புலம்புங்கள்

கதறவும் புலம்பவும்
மண்டியிடவும்
கொடுமை நிகழவேண்டும்
கொடுமை
மாபெரும் கொடுமை
அதுவா வேண்டும்

ஒளி கண்ணைக்கூசுமெனில்
இருளிலேயே இரு
இருளே
சுகமானது
இருளே
அற்புதமானது
அரோகரா அரோகரா
கொண்டாடு கொண்டாடு
அரோகராப்போட்டுக் கொண்டாடு

உனக்கென்று வந்த
வழியைத் தொலைத்துவிட்டு
அடிமையாகக் கொண்டாடு
அரோகரா அரோகரா

உன்னிடம் என்னவுண்டென்று
உனக்குத் தெரியும் நாளில்
உன்னில் வீரம் முளைக்கும்
உன்னிடம் அறிவு முளைக்கும்
அப்போது
உனது துயரெல்லாம்
சிறுதுரும்பாகிவிடும்
உன்னுடைய புலம்பல்
உன்னை அவமானப்படுத்தும்
அன்றறிவாய்
யார் உன் பகையென்றும்
யார் உன் நட்பென்றும்

கண்களைத்திறக்கும்போது
தெரிகிறது
சூரியோதயமும் நிறங்களும்
கண்களைத்திற
காதுகளைத்திற
அப்போது தெரியும் வழிகாட்டியின்
மகிமையும்
வழியின் புதுமையும்

உன்னிடமேயிருக்கிறது
உனது காலமும் உனது ஞானமும்

06 பனையடி வினை

பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே
தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன்
இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று

எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை
நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில்
ஏராளம்  தயக்கங்கள்
ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது.

நானறிய
நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி
எல்லா வெறிக்கும் வழிவிட்ட
பனையே
முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில்.

ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய்
முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ?

தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும்
புதுக் குருத்தெறியும் வரமுடைய
தாலமே
கால நிழலின் குழியுள்
இதோ உனது நாட்கள்
செத்தழிகின்றன

எல்லா வெறிக்கும் வழி விட்ட
முந்தைப் பெரும் பழியெலாம்
இன்று
உன் ஒவ்வொரு தலையாய் கொண்டு போகிறது
என்பேன்;

அதற்கும் மௌனம்தானா
சொல் பனையே

தோப்பென்றும் கூடலென்றும் பேரோடிருந்த
பனங்காடே

பாடலாயிரம் பெருகி இசை பொழிந்த தெருவழியே
நிழல் விரித்திருந்த பனந்தோப்பே
வானளாவி
நிலவும் பரிதியும் மறைந்தொளிந்து விளையாட
ஒளிச்சித்திரங்களால்
பூமியின் சுழற்சியைச் சொன்ன புதிரே
இன்று அகாலத்தில்
பாடல் சிதைந்த தெருவழியே
தனித்திருக்கிறாய்

ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய்

முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ?

07 கிரகம்

பரதேசியின் நிழல் அலைந்த தடம்
திசைகளெங்கும்
கலவரத்தோடும்
நிம்மதியின்மையின் பதற்றத்தோடும்
எல்லாத் தெருவிலும்
எல்லா நகரங்களிலும்
சிதறிக்கிடக்கக் கண்டேன்.

தகிக்கும் வாளின் கூராய்
கண்ணை உறுத்தும் தனித்த நட்சத்திரம் அது
பூமியை வானமாக்கி
சிதறிக்கிடந்தது பன்னெடுங்காலமாய்.

விமானங்களின் பறப்பிற்கிடையிலும்
தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளுக்கிடையிலும்
பெரு நகர் விடுதியில்
மதுவும் இசையும் நடனமும் நிரம்பிய மண்டபத்தில் என
ஒளிர்ந்த பகட்டிலே ஒதுங்கிய
நிழல்
அவமதிப்பின் எச்சில்.

ஆயினுமது வெம்மையாறாத
எரிகோள்.

எந்த நிழலிலும் தங்காத சுவடது.

எந்த மதுவிலும் தணியாத தாக மது

முடியாப் பெரும் பயணத்தில்
நகர்ந்து செல்கிறது

பல்லாயிரம் உள் வெளி வலைகளில்
சிக்கிய நிழல்
கணத்தில் வெளியேறி
விசையெடுத்துப் போகிறது
திசைகளை அழித்து
வெளியையே மாபெரும் திசையாகக் கொண்டு.

08 மலைக்குருவி

வெளியில்
ஆகாயம் தொடும் பெருந்தாகத்தோடு
நிமிர்ந்த மலையில்
நிற்கும் தோறும்
வெளியே கனலும் மூச்சொலிப் பெருக்குப் பெருகுவதைக் கேட்டேன்.

உள்ளே, கருணை பொங்கித் ததும்பும்
ஊற்றொலிச் சங்கீதம்.

தணலும் தண்மையும்
மலையின் அடிவயிற்றுப் பேரருவிகள்.
சுடும் பாறையின் உள்ளிருந்து
பெருக்கெடுத்தோடும் நதி

நதி செல்லும் வழிவிட்டு
வெயில் குடித்துக் காய்ந்திருக்கும்
பெரும்பாறைக் கூட்டம்
ஒரு போதும் வருந்தியதில்லை
இத்தனை பெருக்கெடுத்தோடும் நதி
தன்மடியிருக்கும் போதும்
தான் வெயில் காய்வதையெண்ணி

காற்றாலும் வெளியாலும் ‚
தன்னை நிரப்பி வைத்திருக்கும் பள்ளத்தாக்கு
வான்நோக்கி சிகரத்தை உயர்த்திவிட்டுத்
தான் செல்கிறது
பூமியின் சமதரை நோக்கி

கூடவே தன்னோ டழைத்துப் போகிறது
நதியையும்.

பள்ளத்தாக்கின் மறுபாதி சிகரம்
சிகரத்தின் மறுபாதி பள்ளத்தாக்கு

சிகரத்துக்கும் பள்ளத்தாக்குக்கும்
இடையில் எங்கிருக்கிறது  மலை?

000000000000000000000000000000

யோ கர்ணன் கவிதைகள் 

09 வண்ணத்தப்பூச்சிகள் போன பாதை

போதையை மறைக்கலாம்
காலி மதுக் குப்பிகளை எங்கு வைப்பது
யாருக்கும் தெரியாமல்?
இப்போது
ஏழுகடல் எட்டு மலை கடந்த இளவரசன்
நீளமுடி மந்திரவாதியின் சிரம் சீவுகிறான்
சிறை மீளும் இளவரசி
கட்டியணைக்கிறாள் அவனை
நான் இன்னொரு மதுக் குப்பியை நேசிக்கிறேன்.
மதுக் குப்பிகளை நேசிக்க தெரியாதவனின்
சுவடுகளின் ஒற்றை வரிசையில் பரிகாசத்திற்கென்னயிருக்கிறது?
காற்றைப் போல
வண்ணத்தப்பூச்சியைப்  போல
தடங்கள் பதிக்காத உனது பயண வழியெது?
பறந்து போன வண்ணத்தப் பூச்சியை நினைத்து
பூவொன்று தற்கொலை செய்யுமா என்பது தெரியவில்லை.
கனவின் அரூபத்திற்குமஞ்சுகிறேன்.
வெளியெ ஒலிக்கும் மணியொசைகளிற்கு மஞ்சுகிறேன்.
ஒரு யுகமாகவே மூடியிருக்கிறது
திருமண அழைப்பொன்றுடன் வரப்போகும்
தபால்காரனிற்கான என கதவு
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
வண்ணத்துபூச்சியொன்று தற்கொலை செய்து கொள்வதை

10 நீயிருந்த இடம்

நண்பா.
நீ போய் விட்டாய்.
சித்தாந்தங்கள் நமது சிறகுகள்
வெற்று வெளியில் வெறிக்கும் சிறு சட்டகமொன்றினுள்
உன்னை சுருக்கின அவை
ஆயினும்
உனக்காக சமாதானங்கள்
எங்கள் எல்லோரிடமும் உண்டு.
நமது பணயம் நெடியது
பாதை கொடியது
தரிப்பிடம் இதுவல்ல
தங்கி விட
உயிரோய்ந்து விடவுமில்லை
எல்லோரும் உச்சரிக்கையில்
நான் மௌனித்திருந்தேன்.
முற்றுப்பெறாத உன் கனவுகளும்
தீர்க்கப்படாத ஆசைகளும்
எழுதப்படாத உன் காதலின் கணங்களும்
இன்னும் உயிரோடிருக்கும்
ஒரு மாலை
ஒரு படம்
குனிந்த தலைகளின் கணமொன்று
எது ஈடாகும் இவைக்கு?
எது பற்றியும் கவலை கொள்வதில்லை
எங்கள் மனிதர்கள்.
உண்கிறார்கள். உறங்குகிறார்கள்.
காதலிகளோடு பேசுகிறார்கள்.
மற்றும் கொல்கிறார்கள்.
நீதானில்லை
இதையெல்லாம் பார்க்க
நண்பா,
மன்னித்து விடு அனைவரையும்.
அவர்கள் இங்குதானிருக்கிறார்கள்.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாது
உன் காலியான வெற்றிடத்தில்
இன்னொருவனை இருத்தி

11 சொல்வதற்கில்லை

இங்கே
உறைந்திருக்கும் என் குருதியினடியில்
மறைந்திருக்கலாம்
நீங்கள் எய்த பாணங்களும்

January 08, 2015

(Visited 8 times, 1 visits today)