நெருடிய நெருஞ்சி-27-இறுதிப்பாகம்

நெருடிய நெருஞ்சி-27-இறுதிப்பாகம்நாங்கள் இருவரும் வெளியை வந்து , சிறிது தூரம் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம் . அந்த அதிகாலையிலும் சூழலில் சூடு பரவியிருந்தது . இதமான குளிரும் கடல் காற்றின் உபையத்தால் இருந்து கொண்டுதான் இருந்தது . நாங்கள் சிறிது தூரம் நடந்து ஓர் ஓட்டோவை மறித்துப் போகவேண்டிய இடத்தை எனது மனைவி சிங்களத்தால் சொன்னா . நாங்கள் இருவரும் பயணப் பொதிகளை ஓட்டோவில் திணித்து விட்டு உள்ளே ஏறி இருந்து கொண்டோம்.நான் வெளியே புதினம் பார்க்கும் சுவாரசியத்தில் இருந்தேன் . வழியெங்கும் இப்பொழுதும் வெற்றிக்களிப்பின் எச்சசொச்சங்கள் விளம்பரத்தட்டிகளாகத் தொங்கின . நடந்து முடிந்த வெசாக் பண்டிகைக்கு அதன் அலங்காரங்களும் அவைபாட்டிற்கு அணிவகுத்தன . சில வீடுகளில் வெளிச்சக்கூடுகள் காணப்பட்டாலும் , தமிழன்வாழ்வில் ஏற்பட்ட இருளை அவைகளால் போக்க முடியவில்லை . சீறிப்பாய்ந்த ஓட்டோ தனது வேகத்தை மட்டுப்படுத்தியது , எதிரே ஓர் ஊர்வலம் பலத்த பொலிஸ் காவலுடன் வந்து கொண்டிருந்தது . அதன் நடுவே பல தேரர்கள் வந்து கொண்டிருந்தனர் . நிலமையின் கனதியை உணர்ந்த சாரதி ஓட்டோவை ஓர் குறுக்கு ஒழுங்கையினால் திருப்பினான் . இலங்கையில் பௌத்தித்திற்கான உரிமைகள் காணாது என்று தேரர்கள் ஆர்பாட்டம் செய்து ஊர்வலம் போவதாக மனைவிக்கும் சாரதிக்கும் நடந்த பேச்சுக்களில் என்னால் ஊகிக்க முடிந்தது இப்படி ஒரு குருக்கள்மாரோ அல்லது பாதிரிமாரோ ஆர்பாட்ட ஊர்வலம் செய்யமுடியுமா இந்த நாட்டில் ?? நாங்கள் இப்பொழுது பம்பலப்பிட்டியை நெருங்கியிருந்தோம் . மனைவி போகவேண்டிய பாதையைச் சாரதிக்குக் கூறிக்கொண்டிருந்தா . சிறிது நேரத்தில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மாடித்தொடரில் ஓட்டோ வந்து நின்றது . காலை ஏழு மணியாகியிருந்ததால் சூரியன் சுள்ளிட்டது .ஆயினும் கடல்காத்து அதனை மட்டுப்படுத்தியது . மனைவியின் நண்பி வீட்டின் மாடியிலிருந்து எங்களை நோக்கி சந்தோசத்துடன் கையைக் காட்டினா . நான் ஓட்டோவிற்குக் காசைக் குடுத்து விட்டு மனைவியை உள்ளே போகும்படி சொல்லிவிட்டு சுற்றாடலை அவதானித்தேன் . நீண்டநேரம் இருந்து வந்ததால் கால்கள் இரண்டும் வீங்கியிருந்தன . தூரத்தே கடல் அலைகளிற்கும் , கரைக்கும் நடந்த முத்தமிடல் போட்டி தெளிவாகவே தெரிந்தது . அன்றும் அந்தக் கடல் பச்சை நிறத்திலேயே இருந்தது . நான் சிறிது நேரம் அதில் லயித்துவிட்டு வீட்டிற்கு மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினேன் . நான் மனைவியுடன் கலியாணம் செய்து முதல் தரம் வந்ததால் என்னவோ அவர்கள் தரப்பில் வரவேற்பு பலமாகவே இருந்தது . எனக்கு அவர்களின் அதீத கவனிப்பும் உபசரிப்பும் ஒருவித அன்னியத்தனத்தினை ஏற்படுத்தின . என் மனமோ தனிமையை நாடியது . நான் குளித்து முடிந்தவுடன் , மனைவியின் நண்பி ஒரு கோப்பை நிறையக் கோப்பி கொண்டு வந்து தந்தா . இது தான் சந்தர்பம் என்று பல்க்கணியை நோக்கி சிகரட்பெட்டியுடன் நகர்ந்தேன் . அவர்களுடைய கோப்பி ஒரு தினுசாகச் சுவையாக இருந்தது . காலை வெய்யில் கண்ணைக்கூசியது . பல்க்கணியின் இடதுபக்கமூலையில் எட்டிப்பார்த்த செவ்விளனியின் வட்டில் குரும்பட்டிகளும் புதிதாக ஒரு பாளையும் வெடித்துக் கிளம்பியிருந்தன . அதைச்சுற்றி வண்டுகள் சுற்றிக்கொண்டிருந்தன . இப்படித்தானே எம்மையும் பலவண்டுகள் சுற்றிச்சுழண்டன . கீழே வீதியில் கப்பாயங்கள் வேலைக்கு அணிவகுத்தன . அவர்களது ஒரு தினுசான உடை எனக்கு அதிசயமாக இருந்தது . எல்லோரது முகத்திலும் அதிக சந்தோசத்தையும் , பூரிப்பையும் கண்டேன் . ஒருவேளை எல்லாளர்களை மண்கவ்வச்செய்த தந்திர வெற்றியின் மமதையினால் வந்த பூரிப்பும் சந்தோசமாக இருக்குமோ ? என்று என்மனம் பலவாறாக அலைபாய்ந்தது . பல்கணியிலிருந்து வலதுபுறத்தில் கடலும் அதன் கரையும் தெளிவாகவே தெரிந்தன . கடற்கரைக்கு அருகே இருந்த புகையிரதப் பாதையில் புகையிரதம் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை தனது இருப்பைப் பறைசாற்றியது . முன்பு தண்டவாளம் இருந்து இப்பொழுது தண்டவாளமே இல்லாத பிரதேசமும் இதே நாட்டில் தான் இருந்தது வேடிக்கை வினோதமாக எனக்குப் பட்டது . தூரத்தே கடலில் மூன்று சரக்குக்கப்பல்கள் அணிவகுத்துச் செல்வது மங்கலாகத் தெரிந்தது . நான்சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டேன் . நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . மனைவி வந்து என்னுடன் நின்று வீதியைப் பிராக்குப் பாத்தா . நான் குடித்த கோப்பிக் கோப்பையை எடுத்துக்கொண்டே சாப்பிட வரச்சொன்னா . சாப்பாட்டு மேசையில் இடியப்பமும் , மல்லிச் சம்பலும் இருந்தன . எனக்குப் பிடிக்குமென்று உளுந்து வடை சுட்டிருந்தார்கள் . நான் அளவாக ரசித்துச் சாப்பிட்டேன் . நான் மீண்டும் எனது தவத்தைத் தொடர பல்க்கணியை நாடினேன் . இப்பொழுது வீதியில் ஓரளவு சனநடமாட்டம் குறைந்திருந்தது . ஓர் வினோதமான இரைச்சல் கடல் பக்கம் எனது பார்வையைத் திருப்பியது . ஓர் நடுத்தரமான போர்க்கப்பலும் ,அதனையொட்டி ஆறு மிதவைக்கப்பல்களும் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன . அதில் கடல்படையினர் அணிவகுத்து நின்றனர் . அன்றுதான் மிக அருகில் ஒரு போர்க்கப்பலைப் பார்த்ததால் மனைவியைக் கூப்பிட்டுக் காட்டினேன் . அவை அங்கு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதாக மனைவி சொன்னா . மக்களை எப்பொழுதும ஒருவித அச்சத்திலேயே வைத்திருப்பது இவர்களுக்குப் பலவழிகளில் வாய்ப்பாகவே இருந்தது . வெள்ளைவான் கடத்தல்களையும் இவ்வாறே என்னை சிந்திக்கத் தூண்டியது . கப்பல் படையணிகள் இப்பொழுது காலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது . புலியைக்காட்டித் தங்கள் இருப்பை நிறுத்தியவர்கள் , இன்று புலிப்புழுக்கையைத் தோண்டும் நிலைகண்டு என்மனம் மருகியது . என் நினைவலையை எனது மனைவியின் குரல் கலைத்தது .

” வாங்கோ சாப்பிட ரெண்டு மூண்டு பேரிட்டையல்லோ போகவேணும் “?

“எனக்குப் பசிக்கேல”.

“சும்மா விளையாடாதையுங்கோ அங்கை பாத்துக்கொண்டிருக்கினம் “. நான் எரிச்சலுடன் மனைவியைப் பார்த்தேன் . மனைவியோ தீர்மானமாகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினா . நேரம் இரண்டு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . என்னால் அவர்களுக்குச் சங்கடங்கள் வருவதை விரும்பாத நான் சாப்பாட்டு மேசையை நோக்கி வந்தேன் . அங்கே அவர்களின் எங்கள் மீதுள்ள அன்பு சாப்பாடில் பொங்கிவழிந்தது . நான் பெயருக்குக் கொறித்துக் கொண்டிருந்தேன் . எனது சிந்தனையோ பின்னேரம் சந்திக்கப்போகும் உறவுகளைச் சுற்றியே வட்டமிட்டது . 25 வருடகாலத்து அன்னியத்தனத்தால் வந்த புதிய வாரிசுகளைச் சந்திக்கப் போகின்றேன் . எனது மச்சாள்மாருக்கு வேண்டுமானால் என்னைக் காண்பது சந்தோசமாக இருக்கலாம் . ஆனால் , அவர்களது பிள்ளைகளுக்கு மச்சாள்மாரின் காலத்திற்குப் பிறகு அவர்களுக்கும் நான் அன்னியன்தானே ? யுத்தத்தின் பாலபாடம் இங்குதான் ஆரம்பமாகின்றதோ ? என்மனங் கனத்தது . நான் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு படுக்கப்போய்விட்டேன் . பயணக்களை என்னைச் சிரமம் கொடுக்காது நித்திரைக்குள் கலக்கப் பண்ணியது . மாலை நான்கு மணிபோல் மனைவி தேத்தண்ணியுடன் என்னை எழுப்பினா . மாலை வெய்யில் மனைவியின் முகத்தில் கோலம் போட்டது . நான் தேத்தண்ணியைக் குடித்துவிட்டு குளித்து வெளிக்கிட்டேன் . இருவரும் வெளியே போவதற்காக நான் மீண்டும் கையில் சிகரட்டுடன் பல்கணிக்கு வந்தேன் . தூரத்தே கடல்முகம் சூரியனைப் பிரியும் கவலையில் அழுது சிவந்து போய் இருந்தது . அந்த வேளை எனது சொர்ந்து போன மனதிற்குப் புத்துணர்ச்சியைக் கொண்டு வந்தது .நாம் இருவரும் இறங்கி கடற்கரையை நோக்கி நடந்தோம் . என் மனைவியின் கைகள் அவளையறியாது எனது கைகளைத் தேடின . நான் வலுவாக அவளது பஞ்சுக்கைகளைப் பற்றிக்கொண்டே நடந்தேன் . அதில் ஓர் இனம் புரியாத உணர்வும் இழையோடியது . நாங்கள் புகையிரப் பாதையைக் கடந்து கடற்கரையை அண்மித்தோம் . எம்மிடையே கடல் பல கதைகள் பேசியது . தூரத்தே காலிமுகத்திடலும் , இலங்கை வங்கிக் கட்டிடங்களும் மங்கலாகத் தெரிந்தன . தமிழனின் இருப்பிற்கான பாலபாடம் அரங்கேறிய காலிமுகத்திடலை என்னால் ரசிக்க முடியவில்லை . என்மனம் போலக் கடலும் மங்கிய சூரியனால் சிவந்து போய் இருந்தது . மனைவியின் கைகளை மெதுவாக அழுத்தினேன் .குறிப்பறிந்த மனைவி என்னுடன் மச்சாள் வீட்டை நோக்கி நடக்கத் தயாரானாள் . இருவரும் ஒருவித உற்சாக மனநிலையிலேயே இருந்தாலும் , எனது மனமோ நாளை அதிகாலை பயணத்தை நோக்கியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது .

” என்ன யோசினை ” ? என்னை இடைவெட்டனாள் மனைவி . ” பேசாமல் கொம்மா அன்ரி மாமாவோடை போய் இருப்பமே ” ? கலகலவென்று மனைவி சிரித்தாள் . ” நீங்கள் வரவர நல்லாத்தான் பகிடி விடுறியள் “. நான் நடையைக் குறைத்துக் கொண்டே மனைவியைப் பார்த்தேன் . “கண்ணன்!!! வடிவாய் யோசியுங்கோ .நாங்கள் கற்பனையில வேணுமெண்டால் இங்கை இருக்கலாம். நடைமுறையிலை சரிப்பட்டு வராது .ஏனெண்டால் நீங்கள் இங்கையிருந்து வெளிக்கிட்டுக் கனகாலம் . உங்களுக்கு இங்கத்தையான் நடைமுறை சரியா விழங்கேல. ஒருபக்கம் இருந்தால் , எழும்பினால் வெள்ளைவான் கடத்தல் , கப்பம் எண்டு சனங்களை ஒரு நிரந்தரபயத்திலை வைச்சிருக்கிறான் . மற்றப்பக்கத்தால எங்கடை இருப்பு உடைஞ்சு சுக்குநூறாப் போச்சுது . யாழ்ப்பாணத்தில நேரை எல்லாம் பாத்தனிங்கள் தானே ?? பிள்ளைப்பெத்தால் கூட ஆமியிட்டைச் சொல்லிப்போட்டுத்தான் பெறவேணும் . இங்கையிருந்து நித்தம்நித்தம் மனசாலையும் , உடம்பாலையும் சாகிறதை விட பிறான்சிலை கோப்பை கழுவினாலும் சுதந்திரமாய் நாங்கள் இருக்கலாந்தானே ?? ” அப்ப இங்கை இருக்கிறவை மனுசரில்லையோ ??” எனது மனவெக்கை நெருப்புத்துண்டுகளாக வார்த்தைகளை வாயால்த் துப்பியது .எனது கை சிகரட்டைத் தேடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டது . மனைவி அதை சட்டைசெய்யாமல் எனது மனதை மாற்றும் முயற்சியிலேயே குறியாக இருந்தாள் . ஒருவகையில பாத்தால் அப்பிடித்தான் . இல்லாட்டி எப்பவோ எங்கடை சுதந்திரம் எங்களுக்கு கிடைச்சிருக்கும் . எங்களுக்கும் என்ன வயித்துவலியே ? குளிருக்கையும் ,பனிக்கையும் எங்களைவிட மூளையிலையும் , படிப்பிலையும் குறைஞ்ச வெள்ளையளோட வேலை செய்து ஆருக்கோ வருமானவரி கட்டிறதுக்கு ” .

மனைவியின் குரல் உடைந்து கமறியது . நாங்கள் இருவரும் கதைத்தவாறே மச்சாள் வீட்டை அடைந்தோம் . மச்சாள் என்னைக் கலங்கிய கண்களுடன் வரவேற்றா . நான் அவாவைப் பிரிந்தபொழுது சிறுபிள்ளைகளாக இருந்த மச்சாளின் பிள்ளைகள் எனக்குப் புதினமாகவும் , அவர்களுக்கு நான் புதினமாகவும் இருந்தேன் . பல குடும்பக்கதைகளைக் கதைத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் பிரியமனமின்றி மச்சாளிடம் விடைபெற்றேன் . நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது வனானா லீவ்ஸ் ( BANANA LEEVES ) இல் இரவுச் சாப்பாட்டை முடிக்க உள்ளே நுளைந்தோம் . மங்கிய வெளிச்சமும் , மெதுவான புல்லாங்குழல் இசையும் ஒருவித மோகன நிலையை எனக்கு ஊட்டியது . நாங்கள் கேட்ட சாப்பாடுகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம் . நானோ புல்லாங்குழலில் சொக்கியிருந்தேன் . நாங்கள் வந்த சாப்பாட்டை மெதுவாக ரசித்து , ருசித்துச் சாப்பிட்டோம் . நாங்கள் அங்கிருந்து வெளியேற ஒன்பது மணியாகியிருந்தது . நாங்கள் வீட்டை நோக்கி முன்னேறி சில நிமிடங்களில் அடைந்த பொழுது ,மனைவியின் நண்பி பல்க்கணியில் எங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தா .நான் உடைகளை மாற்றிக் கொண்டு பல்க்கணிக்கு சிகரட்டுடன் வந்தேன் . ஏனோ என்மனம் பெரியக்காவைச் சுற்றியே வட்டமிட்டது .நான் சிறுவயதிலேயே அக்காவுடன் கூடிய ஒட்டுதல் இருந்ததால் வந்தவினையிது .எனது கைத்தொலைபேசியால் அக்காவின் எண்களை ஒற்றினேன் . மறுமுனையில் அக்காவின் குரல் ஒலித்தது .

” அக்கா நித்திரையா போனியே ?”

“இல்லையடா .இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சனான் “.

” சரி அக்கா நான் என்ன்னங் கொஞ்சநேரத்தில வெளிக்கிடப்போறன் .”

“சரியடா நீ ஒண்டுக்கும் யோசியாமல் போட்டுவா . வறவரியமும் கட்டாயம் வா என்ன ?”

அக்கா அம்மா இல்லாத இடத்தில் இருந்து கதைத்தது என் கண்ணில் நீர் கட்டியது . நான் தொலைபேசியை மனைவிடம் கொடுத்தேன் . என்மனமோ அக்காவை , அவாவின் இறுதிக் காலத்தில் என்னுடனயே வைத்திருக்கவேண்டும் என்று முடிவாகவே முடிவு செய்தது . நான் வெளிக்கிடுவதற்கு குளிக்க ஆரம்பித்தேன் . தண்ணியில் குளோரின் நெடி மூக்கைத் துளைத்தது .அதில் சவர்காரம் நுரையாகப் பொங்கியது . நான் ஆனந்தக் குளியல் முடித்து வெளிக்கிட்டேன் . மனைவியும் நண்பியும் எமது பயணப்பொதிகளை வரவேற்பறையில் வைத்திருந்தார்கள் . நேரம் பத்துமணியை நெருங்கிக் கொண்டிருந்தது .நண்பியின் தம்பி தனது நண்பர்களது வானைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நிப்பாட்டினான் . அதில் அவனும் அவனது நண்பர்கள் இருவரும் இருந்தனர் . மனைவி வெளிக்கிடுவதற்குப் போய்விட்டா . நானும் தம்பியும் பயணப்பொதிகளைக் கீழே இறக்கி வானில் அடுக்கினோம் . நான் மேலே ஏறிப்போய் நண்பியிடம் விடைபெறச் சென்றேன் . எமது பிரிவு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகவே ஒட்டியிருந்தது . தோழிகள் இருவரும் கண்ணீருடன் இறுக்கியணைத்து முத்தமிட்டனர் . நாங்கள் வானில் ஏறியிருக்க வான் புறப்பட்டது .கொழும்பு சாலைகளில் வாகனநெரிசல்கள் இல்லாததால் , வான் சீறிப் பாய்ந்தது . மனைவி தம்பியுன் குடும்பக் கதைகள் கதைத்துக்கொண்டு வந்தா . வான் இப்பொழுது களனிப்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த்து . எனக்கோ களனியாறின் தண்ணி சிவப்பாகவே தெரிந்தது . எவ்வளவு அப்பாவிகளை உள்வாங்கிய புண்ணிய ஆறு ? இப்பொழுது வான் விமான நிலயத்தை நெருங்கிவிட்டிருந்தது . நுளைவாயிலில் இராணுவப் பரிசோதனைகள் நடப்பது தூரத்தே தெரிந்தது . போர்முடிந்தாலும் இவர்களது பசிக்குத் தொடர்ந்து தீனி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது . அதுவும் நாட்டின் சர்வதேச விமானநிலயத்தில் . எமது வான் வேகத்தைக் குறைத்தது.எனது மனைவி இருவரது கடவுச்சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டா . சோதனைச்சாவடியை நெருங்கியதும் எமது கடவுச்சீட்டுகளை மந்திகள் குடைந்தன . என்னை உத்துஉத்துப் பார்த்தன . எனக்கு வெறுப்பு மண்டியது . பிரான்ஸ் காவல்துறை கூட என்னை இவ்வளவுக்கு நோண்டியதில்லையே ? எவ்வளவு பண்பாகக் கதைப்பார்கள் . எனக்கு இங்கு வாழ நினைத்த எண்ணம் மெதுவாக மங்கத் தொடங்கியது . எமது வான் அவர்களைக் கடந்து விமானநிலயத்தில் நுளைந்து நின்றது . நாங்கள் பயணப்பொதிகளை இறக்கிக்கொண்டே தம்பிக்கு விடைகொடுத்தோம் .அவர்களது பாதுகாப்புக் காரணங்களால் அவர்களை நாங்கள் நிற்பதற்கு அனுமதிக்கவில்லை .எமக்கு விடிய ஐந்துமணிக்கு விமானம் ஆகையால் நேரம் அதிகம் இருந்தது .நாங்கள் இருவரும் எச்சரிக்கையுடனேயே நேரத்தைக் கடத்தினோம் . நான் கோப்பி சிகரட் பத்துவதானாலும் மனைவி கூடவே வந்தாள் . நேரம் ஒரு மணியைக்கடந்திருந்தது . அவர்கள் பாதுகாப்புச் சோதனைகளை ஆரம்பித்தார்கள் . நாங்கள் பயணப்பொதிகளைப் போட்டுவிட்டு . குடியகல்வுப்பகுதிக்குப் போனோம் .எனது முகமோ இறுகிப்போயிருந்தது .எம்முடன் கதைத்தவாறே அந்த அதிகாரி கடவுச்சீட்டில் முத்திரையை ஓங்கி அடித்தான் . அதில் அவனது வெறுப்புத் தெரிந்தது .ஆனாலும் சிரிப்பு மாறாது என்னை இலங்கை பிடித்திருக்கின்றதா என்று கேணைத்தனமாகக் கேட்டான் . என்னால் புன்முறுவலைத் தான் பரிசாகக் கொடுக்கமுடிந்தது . என்மனமோ இதுதான் உங்கள் நாட்டிற்கு எனது இறுதி வருகை . அடுத்த வருகை எனது ஈழநாட்டிற்கு , ஈழம்ஏயார்வேஸ்சில் , பலாலி சர்வதேசவிமான நிலயத்திலேயே இறங்குவேன் . என்று கறுவிக்கொண்டது . எனது காலத்தில் இது நடக்கவேண்டும் என என்மனம் கடவுளை வேண்டிக்கொண்டது . நாங்கள் இருவரும் பயணிகள் கூடத்தில் போய் இருந்து கொண்டோம் . நேரம் மூன்று அரையாகியிருந்தது . இப்போது அங்கு கூட்டம் சேர்ந்ததால் அமைதி விடைபெற்றது .எமது விமானச் சீட்டுகளைச் சரிபார்க்க குவைத் விமானநிறுவன ஊளியர்கள் வந்திருந்தனர் . நாங்கள் இருவரும் விமனத்தில் உள்ளே போய் இருக்கைகளைப் பார்த்து இருந்து கொண்டோம் .எனதுமுகம் என்னவொ சந்தோசத்தைத் துலைத்திருந்தது .மனைவி என்னுடன் எதுவுமே கதைக்கவில்லை .நேரம் காலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .விமானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு மெதுவாக ஓடுபாதையில் உருண்டோடித் தன்னை நிலைப்படுத்தி , வேகமாக ஓடுபாதையில் ஓடி விண்ணில் பாய்ந்தது குவைத் எயார்வேஸ் .என்மனதில் முட்டிக்குத்திய நெருஞ்சிமுள்ளின் வலி கண்களில் பொளக்கென வழிந்தது .

முற்றும்.

(Visited 4 times, 1 visits today)