சமகாலத்தில் திருநங்கைகளின் இருப்பு

அண்மையில் ஊடறு அமைப்பினர் கிழக்கிலங்கையில் ஏற்பாடு செய்திருக்கும் பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் பார்க்க கிடைத்தது. அதுதொடர்பான வாதப்பிரதி வாதங்களும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இதைப்பார்த்த பொழுது எனக்குச் சில எண்ணங்கள் தோன்றின. அவை சில வேளைகளில் பெண்ணியவாதிகளின் பார்வையிலோ அல்லது நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரது பார்வையிலோ தவறாகத் தெரியலாம். இல்லாது போனால் சரியாகவும் படலாம். ஆனால் இந்தப்பகிர்வின் மூலம் ஒரு புதிய பார்வைகள் கிடைக்குமானால் சந்தோசமே! இல்லாதுவிடின் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதேவேளையில் இந்தப்பதிவை “ஆண்மையவாதச் சிந்தனைச்சிதறல்களின் தொடர்ச்சி” என்ற குடுவையினுள் பூட்டி வைக்காது பொதுவாக உரையாடுவது சிறந்தது என எண்ணுகின்றேன்.
எமது முன்னைய அரசர்கள் மற்றும் சக்கரவர்த்திகள் தங்கள் அந்தப்புரத்துக் காவலுக்கு ஆண் காவலாளிகளை நம்பாது அவர்கள்மீது சந்தேகக்கண் கொண்டு, அவர்களுக்குப் பதிலாகத் திருநங்கையரை காவலாளிகளாக வைத்திருந்தார்கள். இதிலிருந்து அன்றைய கால கட்டத்தில் திருநங்கையரின் சமூக இருப்பு எத்தகைய இழிநிலையில் இருந்தது என்பது தெளிவாகின்றது. சமகாலத்து மேற்குறிப்பிட்ட நிகழ்விலும் நிகழ்வின் முதல்நாள் “திருநங்கைகள் மட்டும்தான் வரலாம்” என்று பகிரங்கமாக அழைப்பிதழில் அழைப்பு விடுவது திருநங்கையரின் இருப்பைக் கேவலப்படுத்தவில்லையா? அன்றும் நிலக்கிழார்களான அரசர்கள் தங்கள் அந்தப்புரத்துக்கு ஆண்களில் நம்பிக்கை கொள்ளாது திருநங்கையரை காவலாளிகளாக வைத்து அவர்களை கேவலப்படுத்தினார்கள். ஆனால் இன்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புதுமை செய்கின்றோம் என்ற பெயரில் திருநங்கையரது இருப்பைக் கேவலப்படுத்துவதாகவே உணர்கின்றேன். சுருங்கச் சொல்லின் அன்றய அரசர்களுக்கும் இன்றய நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சிந்தனை வளர்ச்சியில் எந்த முன்னேற்றத்தையும் என்னால் உணர முடியவில்லை. என்னைப்பொறுத்தவரையில் இப்படியான தனி அடையாளப்படுத்தல்களை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தவிர்த்திருக்கலாம் என்பதே!
கோமகன்
 
10/09/2018
(Visited 6 times, 1 visits today)