“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” – நேர்காணல் -ஷாலினி சாள்ஸ்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை,குறும்படத்தயாரிப்பு,சமூக சேவை,யாழ்என்ரர்ரெயிமென்ற் ,மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர் என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார். இவரே தொடர்ச்சியாக திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கின்ற ஈழத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற தகமையையும் பெறுகின்றார். இவரது “உயிர்வலி” குறும்படம் விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் ,சமூகம், அரசியல் என்று தனது எண்ணப்பாடுகளை ” வல்லினம் ” இலக்கிய சஞ்சிகை வாசகர்களுடன் ஷாலினி சார்ல்ஸ் மனம் திறகின்றார்.

கோமகன்

00000000000000000000000

உங்களை எப்படியாக தெரிந்து கொள்வது ?

அடிப்படையில் நான் மிகவும் சாதாரணமானவள்.என்னைப்பற்றி நான் சொல்வதைவிட மற்ரவர்கள் நான் யார் ? எனது செயல்கள் என்ன ? என்று சொல்வதையே நான் அதிகம் விரும்புகின்றேன்.

இளைய வயதினராகிய உங்களை திரைப்படத்துறை எப்படியாக வசப்படுத்தியது ?

எல்லோரும் சொல்வதைப்போல இந்தத்துறையானது “விபத்து ” என்று சொல்லமாட்டேன். எனது இந்த துறையின் பிரவேசமானது பல படிமுறைகளைக் கொண்டதேயாகும் .ஆரம்பகால கட்டங்களில், 2002/2003 ஆண்டளவில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அநுசரணையுடன் யாழ் நகரில் சிறுவர் விழிப்புணர்வு பற்றிய ஆற்றுப்படுத்தல்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்ததேன்.அதன் பொழுது சில ‘காணொளி துண்டுகளை’ செய்ய வேண்டியிருந்தது .அதன் மையக்கருவானது “சிறுவர் துஷ்பிரயோகம்‘ பற்றியதாகவே இருந்தது.அப்பொழுதெல்லாம் இயக்கம், கமரா, வசனம் எழுதுதல் ,படப்படிப்பு சம்பந்தமான களங்களைத் தெரிவு செய்தல் என்பதெல்லாம் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.என்னையொத்த இளையவர்கள் தன்னார்வத்துடன் இந்த செயல்த்திட்டத்தில் இறங்கினோம்.இதன்பொழுது இரண்டு பிரச்சாரப் படங்களை நெறியாட்கை செய்திருந்தேன் .என்னுடன் கடமையாற்றிய கிருத்திகன் இன்றும் இந்தத்துறையில் இருக்கின்றார். அதன்பின்னர் ஓர் காலஇடைவெளி ஏற்பட்டது .2006 ஆம் ஆண்டளவில் இன்னுமோர் சர்வதேச தொண்டு அமைப்பினால் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் உளவளப்பயிற்ச்சி நெறியில் கடமையாற்றினேன். அதற்காக மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு தன்னம்பிக்கையை மனதில் வைத்து சாதனைகள் புரிகின்றார்கள் என்ற விடையத்தை மையமாக வைத்து “தன்நம்பிக்கை” என்ற ஆவணப்படத்தை நெறியாட்கை செய்தேன். அதன் பின்னரே குறும்படத்தை இயக்க ஆரம்பித்தேன் .முதலாவதாக எனது நெறியாட்கையில் “மறுபக்கம்” என்ற குறும்படம் வெளியாகியது .இது சிறுவர் தொழிளாலர்களைப் பற்றிப் பேசிய ஓர் குறும்படமாகும் .இதுவே எனது படிமுறை வளர்ச்சியாகும்.

சிறுவர் துஸ்பிரயோகத்தில் வடபகுதி முன்னணியில் இருக்கின்றதை பத்திரிகைகளில் படிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் பாலியல் வன்முறை மற்றும் கூட்டு வன்புணர்வு போன்றவை. வடபகுதியில் பாலியல் கல்வியானது எவ்வளவு தூரத்துக்கு முன்னேறியுள்ளது ?

இப்பொழுது ஓரளவு முன்னேறி இருக்கின்றதுதான் என எண்ணுகின்றேன். ஆனால் பாடசாலை மட்டங்களில் முற்றுமுழுதாகவே இல்லை என்றுதான் சொல்வேன்.பாலியல் விழிப்புணர்வு பற்றிய போதிய பயிற்சிகள் ஆசிரியர்கள் மட்டத்தில் இல்லாமையும் ஒரு காரணம். ஆனால் வெளியே கருத்தரங்கங்கள் கற்கைநெறிகளில் இதுபற்றிய விழிப்புணர்வு இருக்கவே செய்கின்றது.

“யாழ் என்ரரெயின்மென்ற்” உருவாகவேண்டிய பின்புலங்கள் எப்படியாக இருந்தது ? அது தனது இலக்கில் வெற்றியடைந்ததாக எண்ணுகின்றீர்களா ?

எனது கணவராகிய இசையமைப்பாளர் பிரியன் அவரது பாடசாலை காலத்திலேயே இசைத்துறையில் ஈடுபட்டு வந்தவர்.அப்பொழுது சிறு கலையகமிருந்தது. திருமணத்திற்கு பின் எம் ஒலிப்பதிவு கலையகத்துக்கு வைத்த பெயரே ” யாழ் என்ரரெயின்மென்ற்” .பின்னர் இதனூடாக திரைப்படத்துறை தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்கங்கள் போன்றவற்றை யாழ் என்ரரெயின்மென்ற் மூலம் முன்னெடுத்தோம். இப்பொழுது ஆரம்பத்தில் நாங்கள் எடுத்திருந்த நோக்கங்களை விட பலமடங்கு முன்னேறி இருக்கின்றோம் என்றுதான் சொல்வேன்.

” உயிர்வலி” குறும்படம் எடுத்தபொழுது உங்களுடைய அனுபவங்கள் எப்படியாக இருந்தது?

” உயிர்வலி” குறும்படமானது ஓர் வித்தியாசமான அனுபவம் என்றுதான் சொல்வேன். இந்தக் குறும்படமானது சர்வதேச எயிட்ஸ் தினத்துக்காக செய்யப்பட்டது. கார்த்திகை மாதம் 27-28 ஆம் திகதிகளில் அதாவது வெறும் இரண்டே நாட்களில் இந்த குறும்படத்தை படப்பிடிப்பு செய்திருந்தோம். இந்தக் குறும்படத்தைப் பொறுத்தவரையில் மிகக்குறுகிய காலகட்டத்தில் செய்து முடித்தேனே என்ற மகிழ்சியும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது. அதேவேளையில் படப்பிடிப்புக்களத்தில் எனது குழுவிற்கு படப்பிடிப்பு செய்யப்பட்ட நாட்களில் குழப்பங்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் நான் முறையாக அரச படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இந்த குறும்படத்தை எடுத்தமையால் பெரிய அளவு வன்முறைகள் ஏற்பட்டிருக்கவில்லை.

இறுகிய பண்பாட்டு விழுமியங்களை உடைய யாழ் சமூகத்தில் ஓர் பெண் இயக்குனராக கடமையாற்றிய பொழுது நீங்கள் சந்தித்த சவால்கள் எப்படியாக இருந்தது ?

எமது சமூகத்தில் ஓர் பெண்ணானவள் அதுவும் பொது வாழ்வில் எதையும் இலகுவாக செய்ய முடியாது என்றுதான் சொல்வேன். அதுவும் சினிமாத்துறையில் அவள் மிகவும் காட்டமான விமர்சனங்களை அவள் கடந்தேயாகவேண்டும். இருந்தபோதிலும் எனது குடும்பத்தில் உள்ள கட்டுப்பாடற்ற ஆதரவானது வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை மறக்கடிக்கின்றது என்பதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.2012 ஆம் ஆண்டு நான் நெறியாட்கை செய்திருந்த குறும்படம் ஒன்றை ஒருவர் பிரதி செய்து திருட்டு வீ ஸி டி மூலம் வெறும் ஐம்பது ரூபாய்களுக்கு சந்தையில் கிடைக்குமாறு செய்ததால் நான் காவல்துறைவரை செல்ல நேரிட்டது.அந்த காலகட்டங்களில் பிரதி செய்வதற்கு நாம் DVD கடைகளையே நாட வேண்டி இருந்தது. தனியாரிடம் ஒலிப்பதிவுகளை செய்ய வேண்டியிருந்தது.அந்த குறும்படம் வெளியாக முன்பே அதன் திருட்டுப்பிரதி வெளியாகிவிட்டது. இதற்காக நான் காவல்துறைவரை சென்ற அனுபவங்கள்கூட உண்டு.

சமகால ஈழத்து திரைப்படத்துறையானது தாயக கட்டமைப்பு மற்றும் புலம் பெயர் கட்டமைப்பு என இருவேறு தளங்களில் பயணம் செய்வதை அவதானிக்க முடிகின்றது. இதை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

என்னைப்பொறுத்தவரையில் தாயக கட்டமைப்புக்கும் புலம் பெயர் கட்டமைப்புக்கும் சரியான தொடர்பாடல் முறைகள் இல்லையென்றே சொல்வேன்.அதேவேளையில் இங்கு குழுமவாத செயல்பாடுகள் அதிகமாக உண்டு.பொதுவாகவே “ஈழத்து திரைப்படத்துறை ” என்று பார்க்கும்பொழுது, இலங்கையின் வேறு மாவட்ட கலைஞர்கள் ஒருவித சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கின்றார்கள் .அதாவது தாங்கள் உள்வாங்கப்படாத நிலையில் எவ்வாறு ஈழதிரைப்படத்துறை என்று அழைக்கமுடியும் ? என்பது அவர்களது வாதம்.அவர்களை பொறுத்தவரையில் ஈழம் என்ற சொல்லாடலானது வடக்கை மட்டுமே குறிப்பதாக உள்ளது.

இந்த சந்தேகங்களை நீங்கள் ஏன் உடைக்க முன்வரவில்லை ?

நான் கிழக்கு மாகாணத்தவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கின்றேன்.அப்பொழுது ஈழம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றேன் என்னைப்பொறுத்தவரையில் சினிமாத்துறையில் ஈழம் என்ற சொல்லாடல் என்பது தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற வடக்கு கிழக்கு மலையகம் எல்லாவற்றையும் இணைத்ததே. நான் ஈழம் என்று பாவிப்பது இலங்கையைத்தான்.

அண்மையில் வடக்குப் பகுதியில் உருவான சர்வதேச உலகத்திரைப்பட விழா பற்றிய உங்கள் எண்ணப்பாடுதான் என்ன ?

அந்த சர்வதேச திரைப்படவிழாவில் எனது குறும்படமும் பங்கு பற்றியிருந்தது. அத்துடன் அதனது இயக்குனர் என்றவகையில் என்னாலும் பங்கு பற்றக்கூடியதாக இருந்தது.ஆனால் இதை ஆழமாக உற்று நோக்கினால் இதில் பங்குபற்றிய கலைஞர்கள் யாராக இருந்தார்கள் என்றவகையில் விமர்சனங்கள் உண்டு.

எந்தவகையில் விமர்சனகள் உண்டு ?

வடபகுதியில் இருக்கின்ற திறமையான கலைஞர்களுக்கு அந்த நிகழ்வில் முக்கியத்துவமோ இல்லை முன்னுரிமையோ கொடுக்கப்படவில்லை.அதேவேளையில் பல திறமையான உள்ளூர் திரைப்படங்கள் இருந்தாலும் அங்கு காட்சிக்குட்படுத்தப்பட்ட திரைப்படங்கள் ஓர் குறிப்பிட்ட கட்டமைபுக்குட்பட்டே இருந்தது.அதனால் எமது மண்ணின் கலைஞர்களுகுரிய கௌரவமோ இல்லை முன்னுரிமையோ கொடுக்கப்படவில்லை. ஆனால் நிகழ்வு என்றவகையில் பார்த்தால் சிறப்பாகவே இருந்தது.

விருதுகளுக்காக சினிமாப்படங்களை நெறியாட்கை செய்தல் பற்றிய உங்கள் நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது ?

இந்த விடயம் என்னைப்பொறுத்தவரையில் உடன்பாடில்லாததொன்று .ஏனெனில் எமது படைப்பானது மிகவும் தரமானதாக இருந்தால் விருதுகள் தாமாகவே எம்மைத் தேடிவரும். நாமாக விருதுகளை நோக்கித் தேடிஓடவேண்டியதில்லை. மேலும் விருதுக்காக எடுக்கப்படும் படங்களானால் அதில் ஜீவன் இல்லாது வெறும் விருதின் வேட்கையே அங்கு மேலோங்கி இருக்கும்.

அதாவது உங்களுக்கு தாயகத்தில் விருதுகள் வழங்குவதில் உவப்பில்லை என்கின்றீர்களா ?

ஓர் படைப்புடன் ஒன்றி ஆத்மபூர்வமாக அந்தப்படத்தை நெறியாட்கை செய்யும் பொழுது தாமாகவே தேடிவருகின்ற விருதுகளில் நான் உடன்பாடானவளே ! ஆனால் விருதுகளுக்காக படம் எடுப்பதை நான் முற்றுமுழுதாக மறுதலிக்கின்றேன்.

” ரதி விருது ” கிடைத்தபொழுது ஏற்பட்ட குழப்பம் தான் என்ன ?

ரதி விருது மூன்றாவது முறையாக தாயகத்தில் நடைபெற்றது. ரதி விருது என்றாலே குழப்பங்களும் பிரச்சனைகளும் நிறைந்தது என்ற எண்ணப்பாடு பொதுவெளியில் உண்டு .முதல் இரண்டு வருடங்களில் நாங்கள் போட்டியிடக் கூடிய பலமான பின்னணிகள் இருந்திருக்கவில்லை. இந்த வருட ரதி விருதுக்கு மொத்தம் ஏழு படங்களை அனுப்பி இருந்தோம் .இந்த விருதின் ஊடாக இரண்டு விடயங்களை வெளிப்படுத்த விரும்பினோம். முதலாவதாக யாழ் நகரில் இருக்கின்ற பெரும்பாலான சினிமாத்துறையை சார்ந்த கலைஞர்கள் சமூகவலைத்தளங்களில் வருகின்ற விருப்பு வாக்குகள், பகிர்வுகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆகியனவற்றை அடிப்படையாக வைத்து ஒருவித போதை நிலையில் காணப்படுகின்றார்கள் .அத்துடன் யூ டியூப் போன்ற காணொளித் தளங்களில் பணத்தைச் செலுத்தி பார்வையாளர்களை அதிகரிக்கச்செய்து தங்கள் இசைத்தொகுப்புகள் மிக வெற்றியடைந்து விட்டதாக சனங்களுக்குப் போலியான தகவல்களை பரப்புரை செய்கின்றார்கள். இதை முறியடிப்பதற்காக மக்கள் வாக்கெடுப்புக்கு எமது பாடல்களை அனுப்பியிருந்தோம் .அதில் குறும்படம், காணொளி பாடல், மற்றும் ஒலிநாடாப் பாடல் ஆகிய மூன்றிற்கும் எமது படைப்புகளுக்கே மக்கள் வாக்களித்து இருந்தார்கள் .ஆனால் வளமையாக குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நாங்கள் யூ டியூப் காணொளியில் பகிரும் பொழுது கலைஞர்கள் மட்டத்தில் எமக்கு பெரிய அளவு ஆதரவு கிடைப்பதில்லை . உண்மையாக ஓர் படைப்பு சனங்களுக்கு சேர வேண்டுமானால் அது சேர வேண்டிய விதத்தில் சேரும் என்பதில் எமது இந்த அணுகுமுறையானது வெற்றியை தந்தது.

ரதி விருது வழங்கப்படுவதில் ஊழல்கள் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கமைய விருதுகளை தெரிவு செய்தல் என்பன தெரிந்திருந்தும் பலர் அதை தட்டிக்கேட்க தயங்கினார்கள். இதை முறியடிப்பதற்காக எமது படைப்புகளை விருதுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தோம் .இதில் எனக்கு சாதகமான விடயமாக இருந்தது. இந்த விருதுத் தேர்வில் கலந்து கொண்ட நடுவர்கள் எல்லோருமே எனக்கு தெரிந்தவர்கள் .அதில் ஓர் நடுவர் எனக்கு தொலைபேசி ஏன் நான் படைப்புகளை அனுப்பவில்லை என்றும் தான் எனது படைப்புகளை பார்க்கவில்லை என வினாவினார் .நான் மூன்று நடுவர்களிடமும் இதை உறுதிப்படுத்தி விட்டு பேசாது இருந்தேன். அதன் பின்னர் விருது விழாவிற்கு அழைப்பு வந்து. நான் அங்கு சென்றேன்.அந்த விழாவில் எனது படைப்புக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்திருந்தன. அதில் மூன்று விருதுகள் மக்களால் தெரிவு செய்யப்படடவை. அதை மக்கள் விருப்பு வாக்குகளால் வந்த விருதுகள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.அது தவிர சிறந்த இயக்குனர்,சிறந்த இசை ,இன்னுமோர் படைப்புக்கான இயக்குனர் என்று மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்திருந்தன . இந்த விருதுகள் “உயிர் வலி” குறும்படத்துக்கும் மற்றும் “அண் ரைற்ரில்” என்ற குறும்படத்துக்கும் கிடைத்திருந்தன. உயிர் வலி குறும்படத்துக்கு கிடைத்தது இரண்டு விருதுகள்.இதை நடுவர்கள் பார்க்கவே இல்லை. நடுவர்களே பார்க்காத ஓர் படைப்புக்கு நீங்கள் எவ்வாறு விருது வழங்க முடியும் என்பதே நான் எழுப்பிய கேள்வி. நடுவர்களுக்கு காட்டப்படாத ஓர் படைப்புக்கு விருது வழங்கப்பட்ட விசித்திரத்தை ரதி விருது வழங்கும் நிகழ்வில் நான் கண்டேன்.

அறிவியல் ரீதியான புனைவுகள் ஏன் ஈழத்து சினிமாவில் உருவாகவில்லை ?

அறிவியல் புனைவுகளை திரைப்படமாக்குவதற்கு மிகவும் முக்கிய தடையாக இருப்பது போதிய தொழில் நுட்ப வளங்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் மிகவும் தரமான செம்மைப்படுத்தும் கலையகம் என்று இரண்டே இரண்டுதான் உள்ளது. அதேவேளையில் அறிவியல் புனைவு திரைப்படங்கள் பாரிய பொருட் செலவில் மேற்கொள்ளப்படவேண்டும் அதுவும் அறிவியல் திரைப்படங்கள் வெளிவராமைக்கு ஒரு காரணம்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஈழம் சார்பான திரைப்படங்களை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?

தமிழகத்தில் இருந்து வெளியாகி ஈழம் தொடர்பான ஒருசில குறும்படங்கள் பார்த்திருக்கின்றேன்.அவற்றில் எனக்கு அதிகளவு உடன்பாடில்லை. முக்கியமாக ஈழத்தமிழின் பாவனை முறையில் உடன்பாடில்லை. முழு நீளத் திரைப்படங்களை பொறுத்தவரையில் அதிகமான படங்கள் புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை குறிவைத்தே எடுக்கப்படுவதாக எனக்கு ஓர் சந்தேகம் உண்டு .சில காட்சியமைப்புகள் உணர்வு பூர்வமாக ஏற்று கொள்ள கூடியதாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஈழம் தொடர்பான திரைப்படங்களில் எனக்கு அதிக முரண்களே உண்டு.ஏனெனில் ஈழம் தொடர்பான திரைப்படங்கள் அந்த மண்ணின் கதை மாந்தர்களது வரலாறு சரியாகத் தெரிந்த ஒருவராலேயே எமது வலிகளை திரை மொழியில் தத்துரூபமாகக் கொண்டு வர முடியும்.

தமிழகத்து திரைப்படத்துறை புலம் பெயர் சமூகத்தை நம்பி இருப்பதாக கூறியிருக்கின்றீர்கள். ஆனால் புலம் பெயர் சமூகமானது ஈழத்து திரைப்படத்துறையையே எதிர்கின்றதே ? குறிப்பாக தமிழக சொல்லாடல்களை ஈழத்து திரைப்படத்துறை வலிந்து திணிப்பதை புலம்பெயர் சமூகம் அவ்வளவாக ரசிக்கவில்லை. இதை ஏன் உங்களால் முறியடிக்கவில்லை ? குறிப்பாக உங்கள் உயிர் வலி குறும்படத்தில் கூட இது இருக்கின்றதே ?

அடிப்படையில் உயிர்வலி முற்று முழுதான ஈழத்து சொல்லாடல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதே. நீங்கள் குறிப்பிடுகின்ற பகுதியில் இளைய சமூகமானது எவ்வாறு தமிழக ஊடகங்களினால் மூளை சலவை செய்யப்படுகின்றார்கள் என்பதை குறிப்பால் உணர்த்தவே ஒரு சில சொல்லாடல்களை சேர்க்க வேண்டியதாக இருந்தது.அதே வேளையில் யாழ்ப்பாணத்தில் தமிழகத்து தமிழே அதிகம் பயன்படுத்தப் படுகின்றது. இதற்கு நான் முற்று முழுதாக எதிரானவள் .ஆனால் நாங்கள் இங்கு எடுக்கின்ற திரைப்படத்தில் ஓர் தமிழகத்து கதாபாத்திரம் வருவதாக இருந்தால் தமிழகத்து சொல்லாடலை பாவிப்பதில் எதுவித பிரச்சனையும் இல்லை. அதேபோல மட்டகளப்பு கதாபாத்திரம் வருமானால் நாங்கள் மட்டக்களப்பு தமிழை பாவிப்பதில் எதுவித பிரச்சனையும் இல்லை. ஆனால் கதைக்களம் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும் கதாபாத்திரங்கள் உள்ளூர் கலைஞர்களாகவும் இருந்து கொண்டு தமிழகத்து தமிழை பேசுவதை நான் முற்றிலும் மறுதலிக்கின்றேன்.

இந்தப்போக்கானது குறிப்பிட்ட காலமாக உள்ளதா? இல்லை நீண்ட காலமாக உள்ளதா ?

இங்கு குறும்படத்துறையானது அதிஉயர் வளர்ச்சியை அடைந்தது ஓர் மூன்று வருடகாலமே. அதற்கு முன்னர் வந்திருக்கின்றனதான். ஆனால் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. இந்த அதிஉயர் வளர்ச்சியை அடைந்த பொழுதே தமிழகத்து சொல்லாடல்களும் தாமாகவே வந்து ஒட்டிக்கொண்டு வந்துவிட்டன. உள்ளூர் கலைஞர்களே சமூகவலைத்தளங்களில் எமது மொழியானது நாடகத்தமிழ் என்றும், ஈழத்து சினிமா எடுத்தால் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்ல முடியாது என்று பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் பலரது கனவு என்னவென்றால் ஈழத்து சினிமா என்ற தோளில் ஏறி தமிழகத்து சினிமாவில் குதிப்பதுவே ! இது ஒருபோதும் சாத்தியப்படாத விடையம்.

ஒரு திரைப்படம் அல்லது குறும்படம் ஆகியவற்றின் வெற்றியை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

பொதுவாகவே தாயகத்தை பொறுத்தவரையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் ஓர் திரைப்படத்துக்கு வெற்றியை ஈட்ட முடியாது .அதற்கான சாத்தியப்பாடுகள் அருந்தலாகவே காணப்படுகின்றன.என்னைப்பொறுத்தவரையில் நீண்ட நெடிய போரை சந்தித்த மக்களுக்கு திரைப்படம் மூலமாக அவர்களை ஆற்றுப்படுத்தும் ஏதாவது ஓர் செய்தி சொல்லப்பட்டு அது அவர்களை சென்றடைத்தால் அதுவே அந்த படைப்பின் வெற்றி என்று சொல்வேன் .பொருளாதார ரீதியிலான வெற்றிகளை இனி வரும் காலங்களே தீர்மானிக்கும் .

” குறும்படத்துறையானது வர்த்தகத்துறையாகி விட்டது” என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன ?

ஈழத்து சினிமாத்துறையை வர்த்தக ரீதியாக மாற்றுவதிற்கு பலர் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அதே வேளையில் தயாரிப்பாளருக்கான பொறுப்புகளை சரிவரக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு .இந்தக் குற்றச்சாட்டுகளானது ஒரு சில தனிப்பட்ட செயல் பாடுகளாலேயே ஏற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

ஈழத்து திரைப்படத்துறையில் ஓர் இயக்குனருக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக எண்ணுகின்றீர்களா ?

இல்லை என்றுதான் சொல்வேன் .காரணம் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து திரைப்பட கலைஞர்களும் ஏகலைவர்களே .எமக்கு துறைசார் நிபுணத்துவம் கிடையாது .நாமாகவே பல சுய பரிசோதனைகளை நடாத்தி அனுபவ வாயிலாக ஒவ்வரு அடியையும் எடுத்து வைக்கின்றோம்.எனவே நிறுவனசார் அங்கீகாரம் என்பது எமக்கு இல்லையென்றே சொல்ல முடியும்.

போருக்கு முன்னரும் பின்னரும் ஈழத்து திறப்படத்துறையானது எப்படியாக இருந்தது அல்லது இருக்கின்றது?

போருக்கு முன்னைய காலங்களில் எமக்கு தெரிந்தது தமிழ்ஈழத் திரைப்படங்களே. அதையும் தாண்டிய திரைப்படங்கள் இருந்திருக்கலாம். அறியப்படாமைக்கு அந்த நாட்களில் எனது வயதும் ஓர் காரணமாக இருக்கலாம். நான் சிறுமியாக இருந்த வேளையில் தெரு ஓரத்தில் இரண்டு பக்கத்திலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்து இரண்டு இந்திய சினிமாவும் ஓர் தமிழ் ஈழத் திரைப்படமும் பார்த்த நினைவு எனக்குண்டு. போருக்கு பின்னரான காலங்களில் தனிநபர் சார்ந்து பல காத்திரமான குறும் படங்கள் முழு நீளத் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எழுபத்திரண்டுகளில் வெளியாகிய ஈழத்தின் திரைப்படங்களுக்கும் சமகாலத்து திரைப்படங்களுக்கும் எத்தகைய வேறுபாடுகளை உணருகின்றீர்கள்?

சமகாலத்து திரைப்படங்கள் தமிழகத்து பேச்சு வழக்கு மற்றும் அதன் பாரம்பரியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியே வந்து கொண்டு இருக்கின்றன.இத்தகைய போக்கு மிகவும் கவலைக்குரியதுடன் ஆரோக்கியமில்லாத விடயமே ! ஆனால், எமக்கான தனி அடயாளத்தையும் ,மண்வாசனையும் கொண்டு மதிசுதாவின் நெறியாட்கையில் உருவான “உம்மாண்டி” முழு நீளத் திரைப்படமும், கேசவராஜனின் நெறியாட்கையில் உருவான “பனை மரக்காடு” முழு நீளத் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது.இந்தத் திரைப்படங்கள் ஈழத்து திரைப்படத்துறையில் ஓர் மைல்கல் என்று சொல்ல முடியும் .
1972களில் உருவான திரைப்படங்கள் எனது வயது காரணமாக பார்க்க முடியவில்லை ஆனாலும் “வாடைக்காற்று” திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை படித்திருக்கின்றேன். “வாடைக்காற்று ” படத்தை ஒத்ததாக தென் இந்திய சினிமாவில் மலையாள படமான “செம்மீன் ” வெளியானது. ஆனாலும் தமிழ் திரைப்படத்துறையில் அப்படியான திரைப்படம் வரவில்லை என்றே சொல்லப்பட்டது.அன்றைய கால கட்டங்களில் நடித்த பல கலைஞர்களை சமகாலத்து இளையவர்கள் பலர் மறந்து போனார்கள். வாடைக்காற்று திரைப்படத்தின் கதையை எழுதிய செங்கையாழியானை எத்தனை பெருக்குத் தெரியும் ? அண்மையில் அவர் காலமான பொழுது வந்திருந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம்.

உங்கள் திரைப்படத்துக்கான கதாநாயகன் / கதாநாயகியை எவ்வாறாகத் தேர்வு செய்கின்றீர்கள் ?

கதைக்களத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ற ஓர் கற்பனைப் பாத்திரம் எனக்கு தோன்றும். இதனடிப்படையிலேயே தேர்வு செய்கின்றேன் .மேலும் ஓர் பாடலுக்கு வருகின்ற கதாநாயகன் வடிவாகவும் சிவந்த நிறத்தை உடையவராகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவைகளைத் தாண்டி வசீகரம் இருந்தாலே போதுமானது. எனது “உயிர்ச்சூறை ” பாடல் காட்சிக்கு இந்த கதாநாயக சட்டகங்களைத் தாண்டி மதிசுதா நடித்திருந்தார் .

ஒரு திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பாகவே அதீத எதிர்பார்ப்புகளை கொடுக்கும் ஊடகத்துறையை நீங்கள் எப்படியாகப் பார்கின்றீர்கள்?

இதில் நான் பொத்தாம் பொதுவாக ஊடகத்துறையை மட்டும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.திரைப்படத்துறையை சேர்ந்த கலைஞர்களும் அவர்களைச் சுற்றியுள்ள நண்பர்களும் அதிக எதிர்பார்ப்புகளை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் .குறிப்பாக சமூவலைத்தளங்கள் பெரும் தாக்கத்தை இந்த விடயத்தில் உருவாக்கிக் கொண்டு வருகின்றன .இவைகள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொடுத்து அந்தப் படைப்பானது வெளியாகும் பொழுது ஏலவே சமூவலைத்தளங்களின் தாக்கத்தால் ஓர் சாதாரணப்பட்ட பார்வையாளனின் எதிர்ப்பார்ப்புகள் இல்லாத பொழுது அவன் கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றான் . இந்த விடயத்தில் நான் மாற்றுக் கருத்தினையே கொண்டுள்ளேன்.

நீங்கள் நெறியாட்கை செய்யும் திரைப்படங்களில் வடிவமைப்பையா இல்லை உள்ளடக்கத்தையா அதிகம் பார்க்கின்றீர்கள் ?

என்னால் வடிவமைப்பை இரண்டாம் பட்சமாகவே எடுக்க முடியும் .ஓர் படைப்பின் போக்கை தீர்மானிப்பது அதன் உள்ளடக்கமே.

ஈழத்து திரைப்படத்துறையில் பெண்களது பங்களிப்பு எப்படியாக உள்ளது ? அவர்களின் இருப்பை இந்த தாயகத்து சமூகம் எப்படியாகப் பார்க்கின்றது?

ஆரம்ப காலகட்டங்களில் அதாவது 2005/06 ஆண்டுகளில் இந்த துறையில் பெண்களது பங்களிப்பு என்பது அருந்தலாகவே இருந்தது .அண்மைக்காலம் வரைக்கும் ஈழத்தின் தொடர்ச்சியான செயல்ப்பாடுள்ள முதலாவது பெண் இயக்குனர் என்றால் அது நானாகவே இருப்பேன் .2006 அளவில் ரம்யா உதயகுமார் “பாரதி ” என்ற குறும்படத்தை நெறியாட்கை செய்திருந்தார். அதன் பின்னர் கதாநாயகிகளை தேடிப்பிடிப்பதே மிகவும் கடினமாக இருந்தது .ஒரு சிலரே தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள் .ஆனால் சமகாலத்தில் தொழில் நுட்பத்துறையிலும் சரி நடிப்புத்துறையிலும் சரி பெண்களது பங்களிப்பானது ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

சமூகம் என்று பார்க்கும் பொழுது இந்த விடயத்தில் யாழ்ப்பாணத்தின் இறுகிய சமூகக்கட்டமைப்பானது மாற்றம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.ஆனால் குடும்ப ரீதியாக ஆதரவுகள் இருப்பது என்பதை மறுப்பதற்கில்லை.

சமகாலத்தில் குறும்படத்தின் முக்கியத்துவம் எப்படியான முறையில் சனங்களுக்கு அவசியமாகப்படுகின்றது?

பொதுவாகவே யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுமக்களுக்கு இங்கு எடுக்கப்படுகின்ற குறும்படங்கள் மற்றும் முழுநீளத்திரைப்படங்கள் அதிகம் தெரிவதில்லை என்றுதான் சொல்லவேண்டும் .அத்துடன் எமது படைப்புகளை நேரடியாக வந்து பார்வையிடுகின்ற பொதுமக்களை 1 – 2 வீதத்துக்குள் வரையறை செய்யலாம் .அதே வேளையில் நாங்கள் சொல்லப்போகின்ற செய்திகள் மக்களிடம் இலகுவாகப் போய் சேர வேண்டும் என்பதற்காகத் “தமிழக சொல்லாடலிலும் மற்றும் தமிழகத்து பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட திரைப்படங்களை எடுக்கின்றோம்” என்ற கருத்துருவாக்கம் எம்மிடையே உண்டு. ஆனால் அவை மக்களிடம் போய் சேர்வதில்லை என்பதே உண்மையாகும் .ஒரு சிலரே எமது மண்ணின் வாசனை கொண்ட திரைப்படங்களைப் பார்க்கின்றார்கள். அதுவும் சமூவலைத்தளங்களில் உள்ள காணொளிகள் மூலமாக பார்க்கின்ற வசதிகள் உள்ளவர்களே பார்க்கின்றார்கள் .அதே வேளையில் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தாயகத்தில் இணையவசதி இல்லாத மக்களும் எமது படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அவர்கள் எங்களது மண் வாசனையுடன் கூடிய திரைப்படங்களையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.

ஓர் திரைப்படத்தை நெறியாட்கை செய்யும் பொழுது எத்தகைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் ?

என்னைப்பொறுத்தவரையில் எல்லா விடயங்களுமே முக்கியமான விடயங்கள்தான். ஆனால் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது காலம் மற்றும் தொழில்நுட்ப வளங்கள். அத்துடன் திரைப்படத்துக்கான நடிக்க நடிகையர் தேர்வு மற்றும் கதையமைப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றேன்.

ஓர் கலையானது கலைக்காக இருக்க வேண்டுமா இல்லை சமூகத்துக்காக இருக்கவேண்டுமா ?

கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்.

நீங்கள் நெறியாட்கை செய்யும் படங்களானது பேசும் மொழியானது எப்படியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் ?

ஓர் திரைப்படத்தின் பேசும்மொழியானது அத்திரைப்படத்தின் கதைக்களத்தின் போக்கைச் சார்ந்தே தீர்மானிக்கப்படும்.

பெண் இயக்குனர்களின் வீச்சு மற்றும் தொழிநுட்பவியலாளர்களது வீச்சு ஈழத்துத்திரைப்படத்துறையில் எப்படியாக இருக்கின்றது?

சமகாலத்தில் பெண்இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லோரும் நின்று நிலைத்து இருக்கின்றார்களா ? என்பது ஓர் பெரும் கேள்விக்குறியாகும். ஓர் படைப்பை கொடுத்து விட்டு நாங்கள் தொடர்ந்து அதில் நிற்க முடியாமைக்கு எமது சமூபின்னணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன .நல்ல படைப்புகளைக் கொடுத்தவர்களே அவர்கள் தாங்கள் குடும்ப வாழ்வில் சென்றவுடன் ஒதுங்கியதைக் கண்டிருக்கின்றேன்.

அண்மையில் இடம்பெற்ற புலம்பெயர் – தாயகத்து கலைஞர்களின் கலந்துரையாடலை எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

இப்படியான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமான விடயமே .ஒரே நோக்குடன் ஓர் நேர்கோட்டில் இது சொல்லுமானால் பயன்தரும் என்று தான் சொல்வேன் .எமது நோக்கமானது, நாங்களும் புலம்பெயர் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ஓர் பொது வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரல் மற்றும் அவர்களினுடாக அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளல் என்பதைக் கொண்டிருக்கின்றது.ஆனால் அவர்களது நோக்கம் என்ன என்பது எமக்குச் சரிவரத்தெரியவில்லை.

அவர்கள் தங்கள் நோக்கங்களை தெளிவு படுத்தியிருந்தார்களா ?

எமது திரைப்படங்களுக்கு வர்த்தக ரீதியான ஒத்துழைப்புகளையும் தரமான திரைப்படக்கதைகளுக்கு தயாரிப்பாளர்களை வழங்குவது பற்றியும் சொல்லியுள்ளார்கள் .ஆனால் வருங்காலங்களில் அதுதொடர்பான செயலத்திட்டங்கள் அமூலுக்கு வரும் பொழுதுதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.

எமக்கென்று பாரம்பரிய சொல்லாடல்கள் இருக்கும் பொழுது ஈழத்தில் இருந்து வெளியாகும் திரைப்படங்களில் தமிழகத்து சொல்லாடல்கள் வலிந்து திணிக்கப்படுவது எதற்காக ?

தென்னிந்திய சினிமாவில் ஊறிய எமது மக்களுக்கு அந்த சொல்லாடல்களிலேயே சொன்னால்தான் அது சென்றடையும் என்றும்,இந்திய சினிமாவே எமது அடுத்த இலக்கு எனவே இந்த வழியில் சென்றாலே எமது இலக்கை அடையமுடியும் என்றவோர் கட்டுப்பெட்டித்தனமான கற்பிதங்களை எமது கலைஞர்கள் வளர்த்துக்கொள்கின்றார்கள். இந்தக் கற்பிதங்களில் இருந்து நான் முற்றுமுழுதாகவே முரண்படுகின்றேன். ஏனெனில் எமது மக்களுக்கு தெரிந்தது ஈழத்து தமிழ் சொல்லாடல்தான். எனவே இந்திய சினிமா மொழியில்தான் கொண்டு சென்று சனங்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற எந்தவொரு அத்தியாவசியம் இல்லை.அத்துடன் ஓர் திரைப்படம் அல்லது குறும்படத்தைப் பார்ப்பதற்கு மொழி என்பது அவசியமற்றது .அதற்கு திரைமொழி என்றவோர் மொழி உண்டு .மொழியே இல்லாத பல திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். மொழியே புரியாத பல அந்நியநாட்டுத் திரைப்படங்களைப் படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஏன் அதன் கதையையும் கூடச்சொல்வோம். ஆகவே இந்திய சொல்லாடல்களில் திரைக்கதையை செய்தால்த்தான் அது மக்களை சென்றடையும் என்ற வறட்டு வாதமானது இந்த இடத்தில் அடிபட்டுப்போகின்றது. அத்துடன் நாம் தமிழகத்து சொல்லாடல்களையும் சரிவரப் பயன்படுத்துவதில்லை என்பதுடன் எமது பாரம்பரிய சொல்லாடல்களையும் சரிவரப் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மையாகும்.

இசைப்பேழையில் உங்கள் அனுபவம் எப்படியாக இருந்தது ?

எனக்குப் பாடல்கள் எழுதிய அனுபவங்கள் உண்டு .ஆனால் இசைப்பேழைகள் உருவாக்கிய அனுபவங்கள் இல்லை.

“யாழ் அறக்கட்டளை” உருவாக்கப்படதன் பின்னணி என்ன ?

எனது நண்பர் ஒருவர் அவரது பிறந்தநாளுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏதாவது காப்பகத்துக்கு உணவு வழங்க முன்வந்தார் .அப்பொழுது அவரின் அனுசரணையின் பேரில் ஓர் காப்பகத்தில் உள்ள போரினால் பாதிக்கப்படட சிறுவர்களுக்கு உணவு வழங்கினோம் .அப்பொழுது எடுக்கப்பட்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின .இதைப்பார்த்த பல நண்பர்கள் தாங்களும் உதவ ஆர்வம் கொண்டுள்ளதாகத் தொடர்புகொண்டார்கள்.அப்பொழுது இதை ஓர் ஸ்தாபனமயப்பட்ட நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல வேலைத்திட்டங்களை செய்யத் தீர்மானித்து உருவாக்கப்பட்டதே “யாழ் அறக்கட்டளை”.

தாயகத்தில் பெண் விடுதலை மற்றும் பெண்ணியம் உங்கள் பார்வையில் எப்படியாக இருக்கின்றது ?

பெண்களான எங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன, சமத்துவம் வேண்டும் என்று சொல்கின்றோம்.அத்துடன் ஆண்கள் செய்கின்ற வேலைகளை பெண்களாகிய நாங்கள் செய்யவதற்குப் பல தடைகள் இருப்பதாகவும் சொல்லிக்கொள்கின்றோம். ஆனால் எமக்குரிய சுதந்திரத்தின் எல்லைகள் மீறாதவரைக்கும் எமக்குரிய சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன் .அதேவேளையில் ஆண்கள்தான் பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு பெரும் தடையாக இருக்கின்றார்கள் என்ற வாதத்தை நான் முற்றுமுழுதாகவே மறுதலிக்கின்றேன். ஏனெனில் பல சாதனைகளை புரிந்த பெண்களது பின்னணிகளில் ஆண்கள் முட்டுக்கடடையாக இருந்திருப்பார்கள் என்றால் அவர்களால் அந்த சாதனைகளை புரிந்திருக்க முடியாது.அத்துடன் ஓர் பெண்ணின் சிந்தனையிலும் அவளது ஆடைத் தேவைகளிலும் இன்று பெண்ணானவள் இங்கு சரிசமானாகவே இருக்கின்றாள்.எனவே எந்தவகையில் பெண்விடுதலை அடையவேண்டும் அல்லது பெண்ணியத்தைப் பற்றி பேசவேண்டும் ? என்பதில் எனக்கு அதிகமாகவே சந்தேகங்கள் உண்டு.

பெண்களது தலைமைத்துவம் அங்கீரிக்கப்படுவதாக உணருகின்றீர்களா?

ஆம் ….நிட்சயமாக உணருகின்றேன் .நான் ஏலவே உங்களது கேள்வி ஒன்றிற்கான பதிலில் கூறியவாறு பெண்விடுதலை மற்றும் பெண்ணியம் பேசிப் பேசியே எங்களுக்கான தலைமைத்துவம் இல்லையோ என்ற மாயத்தோற்றத்தையே கொண்டுவருகின்றோம் என்றே எண்ணுகின்றேன்.

உங்களது உணர்வுகள் அல்லது கருத்துக்கள் பெண் என்ற காரணத்தால் மறுதலிக்கப்பட்டு உள்ளனவா ?

இல்லை, நிட்சயமாக இல்லை.

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றிய உங்கள் எண்ணப்பாடு என்ன ?

இதில் அதிக கெடுபிடிகளை கையாளவேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆடைகளை அணிதல் ஒவ்வருவரது தனிமனித சுதந்திரமாகும். அதேவேளையில் அந்த சுதந்திரமானது சுற்றி இருப்பவர்களை உறுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.பல்கலைக்கழகத்தில் வேட்டியும் சேலையும்தான் மாணவர்கள் அணிந்து கொண்டு வரவேண்டும் என்பதை நான் முற்றுமுழுதாகவே மறுதலிக்கின்றேன்.

பறையிசை பயற்சிப் பட்டறையின் நோக்கங்கள் என்ன?

இந்தப் பறையிசை பயற்சிப் பட்டறையின் செயல்திட்டமானது கடந்தவருடத்துக்குரியது. கடந்த வருடம் யாழ் என்ரர்ரெயின்மென்ற்_க்கு போதிய நிதிவளம் இல்லாத காரணத்தினால் அந்த செயல்திட்டத்தைக் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தவில்லை .2014 ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த பறையிசைக் கலைஞரான மணிமாறன் அவர்களை சந்தித்து, அதன் பின்னர் 2015 இல் முறையான பயிற்சி எடுத்திருந்தோம் .இந்த பறையிசையின் முக்கிய நோக்கமானது எமது பாரம்பரிய இசையை மீள் அறிமுகம் செய்வதுதான். இதில் பாறையை முட்டும் தான் முன்னெடுக்க வேண்டும் என்று ” யாழ் என்ரர்ரெயின்மென்ற் ” எண்ணியிருக்கவில்லை. மாறாகத் தமிழரின் பாரம்பரிய இசைவடிவங்களான ஒயிலாடடம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகம், சிலம்பு போன்றவற்ரை முறையாகப் பயின்று அறிமுகப்படுத்துவதே ” யாழ் என்ரர்ரெயின்மென்ற் ” இன் நோக்கமாக இருந்தது.இதில் பறையிசை முதலாவதாக சாத்தியப்பட்டது.

இந்தப் பறையிசையை அண்மைக்காலத்தில் பிரபல்யப்படுத்துவதற்கு என்னதான் வலுவான காரணமாக அமைந்தது ?

இந்தப்பாரம்பரியக் கலைகள் அழியாது எமது அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இதில் இருந்தது .அத்துடன் நான் ஏலவே கூறியபடி எமக்குப் போதிய நிதிவளங்கள் இதை முன்னெடுத்த ஆரம்ப காலகட்டங்களில் இருந்திருக்கவில்லை. இதுவும் ஓர் முக்கிய காரணம்.

ஆனால், “அண்மையில் யாழ்ப்பாணத்தில் இந்தியதுணைத்தூதரகத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், யாழ் சமூகத்தில் இந்துத்துவாவின் பல வடிவங்களையும், சாதியத்தினையும், சாதீய அரசியலையும், மற்றும் இந்திய கொள்கைவகுப்புத்திட்டங்களையும்,யாழ்நகரில் உள்ள இலக்கியவாதிகள், மற்றும் கலைஞர்கள் ஊடாக விஸ்தரித்து வருவதாகவும், இதில் இந்தப்பறையிசை பயிற்சிப்பட்டறையும் ஒன்று ” என்றவோர் காட்டமான விமர்சனம் உண்டு  ?

இதில் இந்தியத்துணைத் தூதரகத்துக்கும் எமக்குமிடையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதுவித தொடர்பும் இருந்திருக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கலைஞர்கள் வந்திருந்தாலும் இந்தியத்துணைத் தூதரகம் சார்பாக யாரையும் நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைப்பு விடுக்கப்படவில்லை. “யாழ் என்ரர்ரெயின்மென்ற்” _க்கும் தமிழகத்தில் இருந்த மணிமாறனுக்கும் இடையிலான நேரடித்தொடர்பிலேயே இந்தப்பயிற்சிப் பட்டறை உருவானது. இந்தப்பயிற்சிப் பட்டறைக்கு ” வொய்ஸ் ஒப் பிறீடம் ” மற்றும் இங்குள்ள ஒருசில வர்த்தக நிறுவனங்கள் அனுசரணையாளராக இருந்தார்கள் .எமது நோக்கமே இந்த பாரம்பரிய இசைவடிவத்தை தமிழக மற்றும் உள்ளூர் கலைஞர்களையும் ஒன்றிணைத்து செய்வதாகவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் உள்ளூர் கலைஞர்கள் தங்களிடம் போதிய வளமின்மையால் இந்த திட்டத்துக்கு ஒத்துழைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இங்கு ஒரு பெரிய பறையின் பெறுமதியானது அதிகமானது.அத்துடன் அவர்கள் பயிற்சிக்காக கேட்டிருந்த தொகையும் அதிகமாகவே இருந்தது.இதுவும் உள்ளூர் கலைஞர்களை இணைப்பதற்கு தடையாக இருந்த முக்கிய காரணமாக இருந்தது.

இந்த பறையிசை பட்டறை மற்றும் முன்னெடுப்பு நிகழ்வுகளால் வடக்கு கிழக்கில் விளிம்பு நிலையில் இருக்கும் பறையடிக்கும் சமூகத்தினர் ஏதாவது நன்மை பெற்று இருக்கின்றார்களா ? இல்லை அவர்களது இருப்புகளாவது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா ?

நாங்கள் இங்கு இருக்கும் பல பறையிசை கலைஞர்களை தனிப்பட்டமுறையில் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விட்டிருந்தோம். மறுதலையாக அவர்கள் எமது அழைப்பை மறுதலித்து விட்டிருந்தார்கள். காரணம், ” தாங்கள் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை பொதுவெளியில் வெளிப்படுத்த விரும்பவில்லை ” என்பதே. அத்துடன் சாதீய நெருக்குவாரங்கள் இருப்பதனால் பல கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளத் தயங்குகின்ற நிலையே காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் சாதீய முறைமையானது நீர்த்துப் போய் உள்ளதாக ஒரு கருத்து உண்டு.இது பற்றிய உங்கள் கருத்து என்ன ?

இற்றை வரைக்கும் நான் சாதீயம் இல்லை என்றே நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த பறையிசை பயிற்சி பட்டறை நடைபெற்ற மூன்று நாட்களும் எனது நம்பிக்கையை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளின .இந்த நிகழ்வானது பலரது முகத்திரையை தோலுரித்துக் காட்டியது. முக்கியமாகச் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்களின் முகத்திரையை. நாம் இவர்கள் பலருக்கு அழைப்பு விட்டிருந்தும் பலர் இந்தநிகழ்வைப் புறக்கணித்து இருந்தார்கள்.

சமகாலத்தில் நடைபெறும் நல்லாட்சி பற்றிய உங்கள் பார்வைதான் என்ன ?

எனக்கு அரசியலில் அதிகம் ஆர்வம் இல்லை. இருந்தபோதிலும், நான் சார்ந்த இந்த சமூகம் சார்பான அக்கறை எனக்கு நிறையவே உண்டு .அந்தவகையில், சமீபத்தில் நல்லாட்சி தொடர்பான ஓர் விபரணக்காணொளி ஒன்று பார்க்க நேரிட்டது. யாழில் இருக்கின்ற மக்களில் பலர், மேலோட்டமாக யாழ்ப்பாணம் அடைந்துவரும் அபிவிருத்தியைப் பார்த்துச் சொக்கிப் போயிருக்கின்றார்களே ஒழிய அதன் பின்னர் ஒளிந்திருக்கும் ஆதிமூலமான சமூக அபிவிருத்தி எப்படியாக இருக்கின்றது என்பதை சிந்திக்கத் தவறிவிடுகின்றார்கள்.வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களது தனிவாழ்வு சிறக்கவில்லை. காப்பகங்களும் கல்வித்தரத்தின் வீழ்ச்சியும் அதிகரிக்கின்றன .இதை யாரும் கவனத்தில் கொண்டுள்ளதாக நான் எண்ணவில்லை.

போர் முடிந்து 7 வருடங்கள் கடந்து விட்டது. எமது இளைய சமூகமானது கலாச்சார சீரழிவுகளில் சிக்கிச் சீரழிவதும், அவர்களது கல்வியானது திட்மிட்டவகையில் மழுங்கடிக்கப்படுகின்றது என்ற காட்டமான குற்றச்சாட்டு உண்டு .இதற்கு உங்கள் பதில் என்ன ?

இறுக்கமான போர்ச்சூழலில் அருந்தலான தொடர்பாடல்களையும் வாழ்க்கை முறமையையும் கொண்டிருந்த எமது சமூகமானது போரின் பின்னர் வந்த கட்டற்ற சுதந்திர வாழ்வு முறமைக்கு முகம் கொடுக்க முடியாதவோர் அகச்சிக்கலின் வெளிப்பாடே இந்த கலாச்சார சீரழிவு என்று சொல்வேன். அதனுடன் தொடர்புடையதே கல்வித்தரத்தின் வீழ்ச்சியும் .அத்துடன் வெளிநாட்டில் இருந்து வருகின்ற தங்குதடையற்ற அளவுக்கு அதிகமான பணமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது இந்த விடயத்தில் புலம்பெயர் சமூகமும் தெரிந்தோ தெரியாமலோ ஓர் முக்கிய பங்காளிகளாகி விடுகின்றனர். எனவே தாங்கள் கொடுக்கின்ற அதிகளவு பணவிடயங்களில் புலம்பெயர் சமூகமும் தமது எண்ணங்களை மறுசீரமைக்க வேண்டும்.அவர்களது உழைப்பிற்கான கடினத்தன்மையை இங்கிருக்கும் உறவுகள் உணர்வதாக தெரியவில்லை.அதனை உணர்ந்தாலே இந்த கலாச்சார சீரழிவுகள் அகலும் என எண்ணுகின்றேன்.

அதே வேளையில் இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். கலாச்சார சீரழிவு நடக்கின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்ற இதே இளைய சமூகத்தினர்தான் பல சாதனைகளை வடக்கு கிழக்குப் பகுதியில் செய்கின்றார்கள் .அவர்களை யாருமே ஊக்கப்படுத்தி தட்டிக்கொடுப்பதில்லை. ஓர் சமூகம் என்பது தவறும் சரியும் இரண்டும் கலந்துதான் இருக்கவேண்டும். அதுதான் சரியானதும்கூட.ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், முக்கியமாக ஊடகங்கள் சரியானதை முறைப்படி சனங்களுக்கு கொடுக்காது ஓர் சிறிய தவறு நடந்தாலும் அதனை பூதாகரமாக்கி அவர்கள் விட்ட சிறிய தவறுகளை மேலும் கடுமையாக செய்யத் தூண்டுகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

வல்லினம் மலேசியா
02 புரட்டாசி 2016
(Visited 6 times, 1 visits today)