பொது மன்னிப்புக்கேட்டுத் தற்கொலை செய்ய வேண்டியது தமிழ்க்கவியா இல்லை இணையப்போராளிகளா?

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க்கவி தமிழர் தாயகப் போராட்ட காலத்தில் நேரடிப்பங்காளியாகவும் போராட்டத்தில் தனது மகன்களைக் களப்பலி கொடுத்தவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் மகளிர் முன்னேற்ற செயல்ப்பாடுகளை முன்நின்று நடத்துபவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். கடந்த வாரத்தில் தமிழ்க்கவி மலையகத்தவர் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்று சமூகத்தளங்களில் அதிர்வலைகளையும் பெரும் குழப்பங்களையும் விழைவித்தது நடு வாசகர்கள் அறிந்ததே. அவரது மூலக்கட்டுரையைப் பெரும்பாலானவர் படித்தே பார்க்காது அவர் பொது வெளியில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தமிழ்க்கவி வாழவே தகுதியற்றவர் என்பதன் ஊடாக மறைமுகமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டியவர் என்றும் இணையப்போராளிகள் விசத்தைக் கக்கியிருந்தனர்.
ஒருவர் தனது அனுபவங்களை சொல்லும் பொழுது அதற்கு யாருமே விளக்கம் கேட்கமுடியாது. தமிழ்க்கவி மலையக வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். தமிழ்க்கவி தனது அனுபவத்தை சொல்லும் பொழுது பொது மன்னிப்புக்கேள் என்பதும் அவர் வாழவே தகுதியற்றவர் என்பதும் பாஸசிசத்தின் உச்சக்கட்டம் மட்டுமில்லாது ஓர் பெண் படைப்பாளி என்றவகையில் அவரது கருத்துரிமையை முற்றுமுழுதாக மறுதலிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிந்தது .
சமகாலத்து இலத்திரனியல் இணைய வெளியில் ஓர் இணையத்தளத்தையோ இல்லை ஒரு பத்திரிகைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் குழுமத்தில் இருக்கும் பிரதம ஆசிரியர் எனப்படுபவர் ஒரு ஆக்கத்தில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதற்கு உரைகல்லாக தமிழ்க்கவியின் கட்டுரையில் ஒரு சில பத்திகளை மட்டும் எடுத்து கட்டுரையின் போக்கையே திசைமாற்றிய தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தி வியாபாரமும் ( விபச்சாரமும் ) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேவேளையில் “கரை எழில் ” நூலின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர்கள் இக்கட்டுரையை செம்மைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும் செம்மைப்படுத்தலில் போதிய கவனம் செலுத்தப்படாததும் இக் கட்டுரை குறித்த சர்ச்சைகளுக்கு மூலகாரணிகளாகின்றனர். இதை கரைச்சி பிரதேச சபையின் வருத்தம் தெரிவித்த கடிதமும் விநியோகிக்கப்பட்ட பிரதிகள் மீளபெறப்பட்டு கட்டுரை இல்லாதே நூல் வெளியாகும் என்ற அறிவித்தலும் எமக்கு உறுதி செய்கின்றன.
அதே வேளையில் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளையும் பத்திகளையும் உற்று நோக்கும் பொழுது ஓர் விடயம் எமக்குத் தெளிவாகப் புலனாகின்றது. கிளிநொச்சியில் இருக்கின்ற தமிழ்க்கவி மீதான உள்ளூர் அரசியல்களும் இந்த விடயத்தில் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. சர்ச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி இருக்கின்ற படைப்பாளிகளில் பலர் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருந்தையும் இந்த இடத்தில் எம்மால் அவதானிக்க முடிந்தது.
இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் கோருவதற்கு தமிழ்க்கவியை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் “கரை எழில் ” நூலுக்காக எழுதிய கட்டுரையின் கைஎழுத்து வடிவம் இணையபிரதிக்கு ( வேர்ட் ) மாற்றியபொழுது கட்டுரையில் வந்த சொற்தொடரான ” காரணம் தேசப்பற்று மட்டுமல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்தும் தேவைப்பட்டதுதான். ” என்பதில் “மட்டுமல்ல” என்ற சொல் தன்னால் தவறவிடப்பட்டது என்பதனைக் கோடு காட்டினார்.
நடு குழுமம்
(Visited 19 times, 1 visits today)