மிருக பந்தம் – நாயர் – பத்தி

பெயர் : ஜூனியர்
இனம் : ஜெர்மன் ஷெப்பேர்ட்
வாழ்விடம் : லனி தொர்னே – Lagny – thorigny.

எனது அண்ணை வடகோவை வரதராஜன் இயற்கை ஆர்வலராகவும் பிராணிகள் ஆர்வலராகவும் இருந்தமையால் எனது சிறிய வயதிலேயே மிருகங்கள் மீது கட்டற்ற பந்தம் ஆரம்பமாகியது. இதன் விழைவாகவே எனது ” றொனியன் ” மற்றும் “வெந்துர்டி திறைஸ்” சிறு கதை உருவானது. கோப்பாயில் இருந்த மரித்துப்போன றொனியன் ஆகட்டும் இப்பொழுது பருத்திதுறையில் இருக்கும் டைசன் டேவிட் ( கருப்பையா , சுப்பையா ) ஆகட்டும் , நேற்று நான் சந்தித்த இந்த ஜூனியர் ஆகட்டும் தங்கள் நடத்தைகள் மூலம் என் மனதை அள்ளியவர்கள்.

நேற்று அயல் நாட்டில் இருந்து என்னிடம் வந்திருந்த தோழி ஒருவரை அவரது தோழியான அல்விட் வசந்தராணியிடம் அழைத்து செல்ல வேண்டியிருந்தது. பாரீஸ்-இல் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் லனி தொர்னே என்ற இடத்தில் அவர்கள் இருந்தார்கள். தொடரூந்தில் அரை மணியில் அங்கு சென்று விடலாம். வேலைநாட்களில் நான் நண்பர்களை சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கின்றேன். அதற்கு காரணங்களும் உண்டு . எல்லோரும் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, எனது நாளானது அதிகாலை 3 மணிக்கே ஆரம்பமாகும் . அந்த நித்திரையின் மிகுதியை மாலையில் வேலை முடிந்து வந்ததும் தொடர்வேன். ஆனால் வீட்டில் விருந்தாளியாக வந்திருந்த தோழியின் கோரிக்கையை தட்டிக்களிக்க முடியாது அரைமனதுடனேயே நான் வருவதாக அவருக்கு சம்மதம் சொல்லியிருந்தேன்.

நாங்கள் தோழியின் வீட்டிற்கு சென்ற பொழுது இந்த ஜூனியர் எனக்கு அறிமுகமானார். நெடிய உயரம் , எப்பொழுதும் நிமிர்ந்த செவிகள் , கூர்மையான பார்வை துடியாட்டம் அத்துடன் ஜெர்மன் ஷெப்பேர்ட் – க்கே உரிய டெசிபல் கூடிய குரல் என்று எடுத்த எடுப்பிலேயே என்னைக் கொள்ளை கொண்டார். அல்விட் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியதும் நீண்ட கால உறவை சந்திக்கின்ற பரவசத்துடன் என் மிது புரண்டு விளையாடத்தொடங்கினார். சில மணிநேர விளையாட்டின் பின்னர் களைப்பில் ஹோலில் படுத்திருந்தார் அப்பொழுதும் அரைக்கண்ணால் என்னைப் பார்ப்பதும் பின்னர் விழிகளை மூடுவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.

இறுதியாக நான் புறப்படுகின்ற நேரம் வந்த பொழுது பருத்திதுறையில் இருந்த கருப்பையா சுப்பையா போல கவலை மிகுதியால் தூரப் போய் தங்களை ஒழித்துக்கொள்ளாது பல்கணி கம்பிகளில் தனது முன்னங்கால்கள் இரண்டையும் போட்டுவாறு செவிகளை உயர்த்திய படி வைத்த கண் வாங்காது என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். மிருகங்களுக்கு என்று ஓர் மொழியுண்டு அந்த மொழியில் நாங்கள் அவர்களிடம் தொடுகையை மேற்கொண்டால் அவைகள் எந்த சூழ்நிலைகளிலும் தங்களையே பொருட்படுத்தாது எங்கள் வசமாகும். சமகாலத்தில் மனிதர்களிடம் இல்லாத பல நல்ல குணங்கள் இந்த பிராணிகளிடமே உண்டு என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அல்விட் -இன் உபசரிப்பில் நான் அகமகிழ்ந்தாலும் இந்த ஜூனியர் என்னை மறக்க முடியாத பந்தத்தைக் கொடுத்தவர். அந்தவகையில் இவரை தன்பிள்ளை போல் வளர்க்கும் அல்விட் பாராட்டுக்குரியவரே.

(Visited 3 times, 1 visits today)