அறத்துப்பால் ஊழியல் ஊழ் -Fate ,De la destinée-371-380

 


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. 371

செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்பொழுது, முயற்ச்சி தானாக உண்டாகும். அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வரும்.

எனது கருத்து:

ஒருத்தன் எப்பிடித்தான் தலைகீழாய் நிண்டாலும் விதியாலை வாற முயற்சி வந்து காசுபணம் கையுக்கு வந்து சேரும். இதுக்கு நேர்மாறாய் சோம்பல் வரும் இருக்கிற காசையும் துலைக்கிறதுக்கு .

Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.

La Destinée, productrice de la fortune fait naitre l’effort; la Destinée destructrice de la fortune fait naitre la paresse.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை. 372

செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயங்கம் ஏற்படும் . செல்வம் வரவேண்டிய காலம் வந்தால் மூடனுக்கும் நல்லுணர்வு ஏற்படும் .

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் நல்ல படிச்ச அறிவாளியளாய் இருப்பினம். ஆனால் காலம் ஆரைத்தான் விட்டுது பாருங்கோ , சிலநேரத்திலை லூசுவேலையளைப் பாத்து தங்கடை சொத்துபத்துகளை அழிச்சுப்போட்டுத்தான் இருப்பினம். இதே காலம் ஒரு தற்குறிக்கு சொத்துபத்து சேரவேணுமெண்டால் அதுக்கு அவனை தயார்படுத்தும்.

The fate that loss ordains makes wise men’s wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.

La Destinée productrice de la fortune enrichit l’intelligence,
celle qui est destructive de la fortune affaiblit l’intelligence.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். 373

நுண்பமான பல நூல்களை முயன்று கற்றாலும் ஊழிற்கு ஏற்றவாறு அவனுடைய சொந்த அறிவே மேப்பட்டுத் தோன்றும் .

எனது கருத்து:

கெடுகுடி மதி சொல்கேளாது எண்டு ஊரில பெரிசுகள் சொல்லுவினம். ஒருத்தன் என்னதான் படிச்சு பெரிய அறிவாளியா இருந்தாலும் அவன் கெடவேணும் எண்டு விதி இருந்தால் , அவன்ரை படிப்பால வாற அறிவு வளராது. அது அப்பிடியே இருந்து அவனை யோசிக்கவிடால் விழுத்தும்.

In subtle learning manifold though versed man be,
‘The wisdom, truly his, will gain supremacy

On a beau étudier tout ce qu’il y a d’excellent dans les ouvrages, c’est l’esprit dont on est doué par la Destinée, qui finit par prévaloir.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ஆதலும் வேறு. 374

ஒருவன் செல்வம் நிறைந்து காணப்படுகின்றான் . மற்றவன் கல்வி நிறைந்து காணப்படுகின்றான் . இவ்விரண்டிற்கும் விதிதான் ( முன்வினை ) காரணம் . இது உலக இயல்பு .

எனது கருத்து:

சரி ஐயா உலகத்திலை காசு இருக்கிறவனுக்கும் படிப்பு இருக்கிறவனுக்கும் விதிதான் காரணம் எண்டால் , இது இரண்டுமே இல்லாத கூட்டம் ஒண்டு உலகத்திலை இருக்கு. அதுக்கு ஆர் ஐயா காரணம் ?

Two fold the fashion of the world: some live in fortune’s light;
While other some have souls in wisdom’s radiance bright.

La nature de la Destinée est double en ce monde: autre chose est d’être riche; autre chose est d’être intelligent.

நல்லவை எல்லாஅம்தீயவாம் ; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. 375

விதி ஒத்திருந்தால் காலம் அல்லாத காலத்திலும் ஆக்கத்தைப் பெறலாம் . விதி சதி செய்தால் சரியான காலத்திலும் அதைப் பெற முடியாது .

எனது கருத்து:

சில பேரைப்பாத்தியள் எண்டால் பெரிய பிஸ்னஸ் மைக்கினெற்று எண்டு சொல்லிக்கொண்டு காசு அள்ளிறன் பேர்வளி எண்டு தலைகீழாய் நிண்டு தண்ணி குடிப்பினம் . ஆனால் ஐஞ்ச சதம் எடுக்கமாட்டினம் . அந்த இடத்திலை இவையின்ரை எழுத்து பிழையெண்டால் இப்பிடித்தான் நடக்கும் .

All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.

Pour donner la richesse, (la Destinée) transforme tout bien en mal et tout mal en bien.

பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. 376

விதி சாதகமாக இல்லையென்றால் காக்கப்பட்ட பொருளும் நழுவிப் போய்விடும் . விதி சாதகமாக இருந்தால் காக்கப்படாத பொருளும் அழியாமல் இருக்கும் .

எனது கருத்து:

சிலபேரை பாருங்கோ ஆரையும் ஆட்டையைப்பட்டு , மொள்ளமாரி வேலையள் செய்து சேத்த சொத்துப்பத்துகளை , அவை எவ்வளவுதான் தலைகீழாய் நிண்டு காப்பாத்த நினைச்சாலும் அது ஏதோவழியிலை அழிஞ்சு போடும் . ஆனால் அவை உடம்பை வருத்தி இரத்தத்தை புளிஞ்சு சேத்த தேட்டங்களை அவை எங்கை கொண்டே போட்டாலும் அது அழியாது . இதுக்கெல்லாம் விதிதான் காரணமெண்டு ஐயன் சொல்லிறார் .

Things not your own will yield no good, howe’er you guard with pain;
Your own, howe’er you scatter them abroad, will yours remain.

Ce que tu converses avec le plus de soin s’en va, si la Destinée ne t’en attribue pas la propriété. Ce qui t’est réservé par la Destinée te reste, même s’il est jeté dehors.

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

கோடிக்கணக்கான செல்வத்தை ஒருவன் முயன்று சேர்த்து வைத்தாலும் , விதி இருந்தால்தான் அவனால் அதை அனுபவிக்க முடியும் .

எனது கருத்து:

ஒருத்தன் எவ்வளவுதான் கோடிக்கணக்கான சொத்துப்பத்துக்களை வைச்சிருந்தாலும் , அதை அவன் ஆண்டுஅனுபவிக்கக் குடுத்துவைச்சிருக்கவேணும் கண்டியளோ.

Save as the ‘sharer’ shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.

Tu as beau amasser un krore, tu ne peux en jouir,
si le Dispensateur ne t’en a pas donné les moyens.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உடற்பால
ஊட்டா கழியும் எனின். 378

மேலான செல்வம் இருந்தும் தீவினைக்கு உள்ளானவர்கள் இன்பம் பெறாமல் , துறவறத்தை நாடிச்செல்வர் .

எனது கருத்து:

உண்மையிலை எனக்கு இது விளங்கேலை . விதி ஏழையிளிட்டை மட்டும் தான் தன்ரை வேலையை காட்டுதோ? எண்டு அப்ப பணக்காறர் தங்கடை காசாலை விதியை விலைக்கு வாங்கி போட்டினமோ ? அவைக்கும் ஒண்டாய் தானே வேலை செய்யிது. அவையளிலையும் கன பேர் நடுறோட்டுக்கு வந்திரிக்கினம் . ஏன் கனக்க வேண்டாம் , திருப்புகழை தந்த அருணகிரியர் பணக்காறனாய் இருந்து தானே துறவியானவர் பாருங்கோ .

The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.

La pensée de renoncer naît chez les pauvres,
si la Destinée leur épargne leur part des douleurs.

நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் ; அன்றுஆங்கால்
அல்லல் படுவதுஎவன். 379

நல்வினையால் நன்மை வரும்பொழுது மகிழ்ச்சியடைகின்றவர்கள் , அது இல்லாமல் தீமை வரும் போது மட்டும் ஏன் வீணாக வருந்த வேண்டும் ?

எனது கருத்து:

“மனம் ஒரு குரங்கு” எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். சந்தோசம் எண்டால் ஒரேயடியா துள்ளிப் பாயிறது . துக்கம் எண்டால் ஒரேயடியா தலையை கவிட்டுக்கொண்டு நிக்கிறது . இது ரெண்டும் இல்லாமல் சமனாய் இருக்கவேணும் எண்டு ஐயன் சொல்லிறார் .

When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain?

Pourquoi celui qui trouve bons, les plaisirs conférés par la Destinée,
trouve-t-il insupportables, les douleurs causées par elle.

ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துஉறும். 380

விதியைப் போல் வலிவுள்ள ஓரு பொருள் உலகில் வேறு இல்லை . அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து , தான் ஒன்றே முடிவில் வெல்கிறது .

எனது கருத்து:

உலகத்திலை கெட்டசாமான் எது எண்டால் அள் ஆளுக்கு ஒவ்வண்டை சொல்லுவியள் . நீங்கள் சொல்லுற கெட்ட சாமானுகளுக்கெல்லாம் ஒரு அப்பன் இருக்கிறான் எண்டு ஐயன் சொல்லிறார் . அவன்தான் விதி . நீங்கள் என்னதான் தலைகீழாய் நிண்டு தண்ணி குடிச்சாலும் , இவனின்ரை ஒத்துளைப்பு இல்லாட்டி ஒண்டுமே செய்யேலாது . உலகத்திலை இருக்கிற எல்லா இயக்கமுமே இந்த விதியின்ரை கொண்றோலிலை தான் கிடக்கு எண்டதை ரெண்டு வரியிலை ஐயன் வலு கிளீனாய் சொல்லியிருக்கிறார் கண்டியளோ .

What powers so great as those of Destiny? Man’s skill
Some other thing contrives; but fate’s beforehand still.

Qu’y a-t-il de plus puissant que la Destinée?

Elle devance tout plan médité (pour la vaincre).

 

 

(Visited 12 times, 1 visits today)