கையிலாயம் போறன்-பத்தி

வணக்கம் பிள்ளையள் ,

நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலைப் பக்கம் தலை வைச்சு படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது .

போன வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான் தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப் பாத்தன் .என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை .

பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேலை . என்ரை கை ரெண்டும் தன்ரை பாட்டிலை தலைக்கு மேலை போட்டிது . இதை நான் பாத்தது விடியக்காத்தாலை மூண்டு மணிக்கு . நான் உயிரோடதான் இருக்கிறனோ எண்டு எனக்கு ஒரு சமசியம் . நான் பாருங்கோ கையை நுள்ளி பாத்தன் . ஆனா நுள்ளின கை மனுசிக்காறியின்ரை .

” என்னப்பா காலங்காத்தாலை கையை காலை நுள்ளுறியள் “

எண்டு மனுசி சன்னதம் ஆட எனக்கு வந்த கனவு கலைஞ்சாலும் , உள்ளுக்கை விறாண்டி கொண்டு கிடந்திது . இந்த விசையத்தை மனிசிகாறிக்கு சொன்னன் .

” என்ன சிவபெருமானும் உங்கடை கனவிலை வந்தவரோ ??உங்களுக்கு நோர்மலாயே மண்டையுக்கை ஒண்டும் கிடவாது . இப்ப துண்டாய் கழண்டு போச்சிது “

எண்டு எனக்கு கீல் ஏத்தினாள் . எனக்கு என்ரை விறாண்டல் மட்டும் நிக்கேலை . பேந்து போன சனிக்கிழமை என்ரை சோதரம் ஒண்டு கனடாவிலை இருந்து ஸ்கைப்பிலை வந்தான் . வழக்கமாய் என்னோடை கதைக்கிறதை ஒரு அவமானமாய் நினைக்கிறவன் ஏன் வாறான் எண்டு குழம்பிக்கொண்டு எடுத்தன் . அப்ப அவன் ஒரு விசையத்தை சொன்னான் . தன்ரை மனிசியின்ரை தாய்காறி ஒரு பத்துநூசத்திக்கு முதல் செத்து போனாவாம் . நான் ஏங்கி இடிவிழுந்து போனன் . எனக்கு அந்த மனிசியை என்ன நிறம் எண்டும் தெரியாது . நான் ஏன் போன வியாழன் கையிலாயத்தை கனவிலை கண்டன் ?? அப்ப மனுசி சாகப்போறது ஏதோமாதிரி எனக்கு தெரிஞ்சிருக்கு எண்டுதானே பிள்ளையள் அர்த்தம் .

செத்தால் பிறகு என்ன நடக்கும் ?? இதை ஆருக்கும் முதல் தெரிய வருமோ எண்டெல்லாம் எனக்கு கனக்க யோசினையள் . உங்களுக்கும் இப்பிடி ஏதாவது அசுமாத்தங்கள் உங்கடை வாழ்க்கையிலை தெரிஞ்சதோ எண்டு சொல்லுங்கோவன் . சுறுக்கரும் ஒரு தெளிவுக்கு வரவேணுமெல்லோ ??? அப்ப நான் போட்டு வாறன் பிள்ளையள் …….

April 04, 2013

(Visited 1 times, 1 visits today)