‘தமிழ் அடையாளத்தைப் பேணும் அதேவேளை மொழி, இன, மத எல்லைகளைக் கடந்து இலக்கியத்தை நேசிக்க, மதிக்க, கொண்டாட முன்னிற்பவன் நான்.’ – சோ.பத்மநாதன்

சோ.பத்மநாதன்

சோ.பத்மநாதன்



இலங்கையின் வடபகுதி யாழ்நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட சோ.பா என்றழைக்கப்படும் சோ.பத்மநாதன் பன்முக ஆளுமையுடைய ஓர் முதுபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றார். ஓர் மொழிபெயர்பாளராகவும், கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் சோ.பா அவர்கள் ஈழத்து இலக்கிய வெளிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இதில் வேற்று மொழிக்கவிதைகளை தமிழுக்குக் கொண்டு வந்தது முக்கியமானது. பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபராகப் பணியாற்றிய இவரது கவிதைகள் யாவுமே தத்துவச்சிக்கல்களிலோ அல்லது கோட்பாட்டு சித்தந்தங்களிலோ தன்னைக் கட்டுப்படுத்தாது மிகவும் எளிமையாக யாழ்ப்பாணத்து வட்டாரவழக்கில் அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது கவனிக்கப்படவேண்டியதாகும். உதாரணமாக அண்மையில் ஜெர்மன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அப்பிளும் வெள்ளரியும் என்ற கவிதை இவ்வாறு வருகின்றது,

அப்பிளும் வெள்ளரியும்
திருநெல்வேலிச் சந்தை
காலை ஏழு மணி
நடைபாதையில் இரண்டு குவியல்கள்
கள்ளிப் பெட்டியின் மேல்
அழகாக அடுக்கப்பட்டிருந்தன அப்பிள்
பக்கத்தே – நிலத்தில் – சாக்கின் மேல்
குவிக்கப்பட்டிருந்தன வெள்ளரி!

புதிய சூழலை
தன் ஸ்பொன்ஜ்; கண்ணறை ஊடாக
வியப்போடு பார்த்த ஒரு அப்பிள்
எந்தச் சலனமுற்றுக் கேட்டது
“நீ யார்?”

தன் ஊரில் வந்து
தளுக்கி மினுக்கிக் கொண்டு
தன்னையே யாரென்று கேட்கும்
அப்பிள் மேல் கோபம் வந்தாலும் –
இந்தக் கேள்விகளுக்குப் பழகிப் போனதால்
பொறுமையொடு பதிலளித்தது வெள்ளரி:
“நான் வெள்ளரி!”
“எங்கிருந்து வருகிறாய்?”
“சங்குவேலி!”
“எப்படி வந்து சேர்ந்தாய்?”
“மாட்டு வண்டிலில்”
“அது சரி, நீ யார்?”
வெள்ளரி கேட்டது.

“நான் அப்பிள்”
“எவடம்”
“அவுஸ்திரேலியா”
“எப்படி வந்து சேர்ந்தாய்?”
“கப்பலிலை”
பெருமையோடு சொன்னது அப்பிள்!

வெள்ளரியின் குடலையை
வியப்போடு பார்த்த அப்பிள் கேட்டது
“நீ போட்டிருக்கும் சட்டைக்கு என்னபேர்?”
“பனை ஓலை!”
அதை இளக்காரமாகப் பார்த்தது
ஸ்பொன்ஜ் இல் பொதிந்திருந்த அப்பிள்
“உன்னை எப்படிச் சாப்பிடுவதாம்?”
“பனங்கட்டியோடு!”
“அப்ப, உனக்கு இயற்கையான இனிப்பு இல்லை!”
“அப்படியல்ல, எனக்கும் பனங்கட்டிக்கும் தோது?”
“அதென்ன, பனை ஓலை, பனங்கட்டி என்று,
பனையோடை ஓரே கொண்டாட்டம்?”
“பனை தான் எங்களுக்கு ஆதாரம் பாதுகாப்பு!”

மூன்றாம் நாள்
வெய்யிலின் தாக்கம் அப்பிளில்
வியாபாரி தண்ணீர் தெளித்தும் பயனில்லை
பனை ஓலைக் குடலையின் குளிர்மையில்
வெள்ளரி பத்திரமாக இருந்தது
ஒருத்தி அதை இருபது ரூபாவுக்கு வாங்கினாள்
அப்பிளை விலை குறைத்து
வியாபாரி கூவுகிறான்
வாங்க ஒருவரும் வரவில்லை
விடைபெற்றபடி வெள்ளரி சொன்னது
“இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியம்!”

இதுவரையில் வெளிவந்த நுல்களாக,காவடிச் சிந்து, வடக்கிருத்தல், ஆபிரிக்கக் கவிதைகள், தென்னிலங்கைக் கவிதை, நினைவுச் சுவடுகள், பர்மிய பிக்கு சொன்ன கதைகள், Tamil Short Stories from Sri Lanka, Sri Lankan Tamil Poetry என்பன குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகைக்காக நான் கண்ட நேர்காணல் இது .

கோமகன்

0000000000000000000000000000000

உங்களை இளையவர்களாகிய நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?

யாழ் நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வண் – வடமேற்கு அல்லது சிப்பித்தறை என்ற சிறு குறிச்சி என் சொந்த ஊர். பிரசித்தி பெற்ற கோம்பையன் மணல் சுடலை 200 மீற்றர் தொலைவில். 500 மீற்றர் தூரத்தில் ஆறுகால் மடம். நெல் வயல்கள் ஊடே வரம்பில் 1½ மைல் நடந்தால் நாவாந்துறை.  நெய்தலும் மருதமும் மயங்கும் நிலம் இந்தச் சூழலே என்னை உருவாக்கியது. என் படைப்புலகின் ஊற்றுக் கண்ணை அங்குதான்  காணலாம்.

நான் கல்வி கற்றது யாழ் இந்துக் கல்லூரியில். வித்துவான் கார்த்திகேயனிடம் தமிழும் ‘கொம்யூனிஸ்ற்’ கார்த்திகேசனிடம் ஆங்கிலமும் கற்றேன். பாடங்களைப் போதிப்பதோடமையாது ஓர் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த பெருமக்கள் அவர்கள். பின்னாளில் பலாலி ஆசிரிய கலாசாலையில் டொக்ரர் சிவப்பிரகாசம் என்ற மேதையைச் சந்தித்தேன். என்னைச் சிந்திக்கத் தூண்டியவர் அவர். என் 15 வயதிலிருந்து திருமுருக கிருபானந்த வாரியாருடைய விரிவுரைகளைக் கேட்டு வந்திருக்கிறேன். அருணகிரியின் சந்தத் தமிழுக்கு என்னை ஆற்றுப்படுத்தியவர் வாரியார் சுவாமிகள்.

இப்பெருமக்களுடைய செல்வாக்கின் சுவடுகள் என் ஆளுமையில் அழியாது பதிந்துள்ளன.

நீங்கள் பன்முகப்படுத்தப்பட்ட ஓர் இலக்கியச் செயற்பாட்டாளராக எம்மிடையே இனங்காணப்படுகின்றீர்கள். எத்தகைய பின்புலம் உங்களை இதனுள் கொண்டுவந்தது ?

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் நான். என்னை வளர்த்து ஆளாக்கிய தாய் மாமனார்  சுருட்டுத் தொழில் செய்தவர். அந்தச் சூழலில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இல்லை. அந்தப் பின்புலத்தைக் கொண்ட நான், ஆசிரியனாய் ஆங்கில விரிவுரையாளனாய் வளர்ந்து இருமொழிப் புலமை சான்ற மிகச் சிலருள் ஒருவனானமை சாதனை என்றே சொல்ல வேண்டும்.

‘பன்முகம்’என்று நீங்கள் கருதுவது கவிதை, விமர்சனம், மேடைப்பேச்சு, மொழிபெயர்ப்பு, நாடகம் என என் ஈடுபாடுகள் பரந்துபட்டுக் கிடப்பதைத்தான் என நினைக்கிறேன். என் மொழி ஞானமே எனக்கு ஆதாரம்.  மொழியை விதம் விதமாகக் கையாளுவது எனக்கு இன்பந்தரும் பொழுதுபோக்கு. தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஃப்ரெஞ்சு மொழிகளின் பேச்சோசைகள் எனக்கு அந்தமொன்றில்லா ஆனந்தம் தருபவை.

எமது தாயகத்தின் பேரவலங்களின் போதெல்லாம் நீங்கள் புலம் பெயராது ஓர் நேரடி சாட்சியாக எம்மிடையே வாழ்ந்து வந்திருக்கின்றீர்கள். அந்தக்கால கட்டங்களிலே ஈழத்திலே எழுந்த போரிலக்கியம் பற்றிய உங்கள் பார்வைதான் என்ன?

இங்கு நிகழ்ந்த பேரவலத்துக்குச் சாட்சியாக வாழ்ந்திருக்கிறேன். எம்மண்ணை விட்டு ஓடுவதில்லையென்பது நான் எனக்கு விதித்த நோன்பு. போர்க் காலத்தில் மக்கள் பட்ட துன்பத்தைப்பாட நான் பின்னின்றதில்லை. கவிதை என்ற இலக்கிய வடிவமும் குழந்தை சண்முகலிங்கத்தின் நாடகங்களும் உச்சத்தைத் தொட்டன. புனைகதை அந்த அளவுக்குப் போகவில்லை.

ஓர் ஆசிரியராக இருந்த உங்களுக்கு மொழிபெயர்ப்பில் எப்படி ஈடுபாடு வந்தது ?

நான் ஆங்கிலம் போதனா மொழியாக இருந்த காலகட்டத்தில் கல்வி கற்றவன். ஆனால் தமிழ் மீது மிக்க ஆர்வம் கொண்டிருந்தேன். எனக்கு ஓரிரு ஆண்டுகள் இளையவர்கள் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். அவ்வாறு கற்று, பல்கலைக்கழகம் புகுந்து சாதனை புரிந்த அணியில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், யோகநாதன், கதிர்காமநாதன், பரராஜசிங்கம், குந்தவை முதலியோர் இருந்தனர். ஆனால் என் ஆங்கில ஞானம் அவர்களுக்குக் கிடைக்காத சில அநுகூலங்களை எனக்குத் தந்தது. அதனால் இயல்பாகவே மொழிபெயர்ப்பில் ஓர் ஈடுபாடு ஏற்பட்டது.

செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், யோகநாதன், கதிர்காமநாதன், பரராஜசிங்கம், குந்தவை ஆகியோருடனான அனுபவங்கள் எப்படியாக இருந்தன?

செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோர் யாழ் இந்துக் கல்லூரியில் எனக்குப் பின் ஒரிரண்டு ஆண்டு இடைவெளியில் கற்றவர்கள். எழுத்துலகில் இவர்களோடு எனக்குக் கடைசி வரை தொடர்பிருந்தது.  யோகநாதன் தமிழ்நாடு கொழும்பு என்று அலைந்து கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தார்.  அந்நாட்களில் நாம் இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவியதுண்டு.  ஏனையவர்களோடு வாசகன் என்ற அளவிலான பரிச்சயம் மட்டுமே.

ஈழத்து இலக்கியப்பரப்பில் தலித்திய மற்றும் பெண்ணிய எழுத்துகளுக்கான தேவைகள் எந்த அளவில் இருக்கின்றதாகக் கருதுகின்றீர்கள்?

‘தலித்’ இலக்கியம் என்பது மஹாராஷ்டிராவில் தோன்றி குஜராத், கர்நாடக  மாநிலங்களுக்குப் பரந்த ஓர் இலக்கிய விதை. ஈழத்து இலக்கியத்துக்கு அப்பெயர் பொருந்துமோ என்பது குறித்து எனக்கு ஐயம் உண்டு.  ஆனால் இந்திய எழுத்தாளர்களுக்கு முன்பே டானியல் அவ்விலக்கிய வகையை இங்கு முன்னெடுத்துவிட்டார்.

பெண்ணிய எழுத்து தமிழ் நாட்டில் ஓங்கிய அளவுக்கு இங்கு வேர் கொள்ளவில்லை. ‘பெண்ணியம்’ என்பது மத்திய, உயர்தர வகுப்பினரிடையே ஒரு கோஷமாக உள்ளதே தவிர அடிநிலை மக்களைத் தொடவில்லை என்பதே எனது பார்வை.

ஈழத்து இலக்கிய வெளியில் புலம் பெயர் இலக்கியம் எப்படியான தாக்கத்தை உருவாக்கியுள்ளது?

புலம்பெயர் இலக்கியத்தை ‘ஆறாம் திணை’ என்கிறார்  சேரன். சங்க இலக்கிய மரபு அன்பின் ஐந்திணை பற்றிப் பேசுகிறது. காதல் ஒழுக்கத்தை தமிழ்நாட்டின் புவியியலோடு சார்த்தி இலக்கியம் படைத்த இம்முயற்சி தனித்துவமானது. இக்காலத்தில் எழும் புலம்பெயர் இலக்கியம் அதற்கும் அப்பால் சென்றுள்ளது. புலம்பெயர் எழுத்தாளர்கள், தாம் துறந்து சென்ற ஈழ நினைவுகளை இலக்கியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புகலிடத்தின் புதிய சூழலோடு, வேற்று மொழியோடு, அந்நிய கலாசாரத்தோடு மோதும்போது தமக்கு ஏற்படும் அநுபவத்தை இலக்கியமாக்க வேண்டும். மற்றொன்று: இந்தப் படைப்பாளிகளின் காலத்துக்குப் பின், புலம்பெயர் இலக்கியம் வாழுமா? புகலிடத்தில் பிறந்து வளரும் புதிய தலைமுறை தமிழில் இலக்கியம் படைக்குமா? என்ற கேள்விகள் என்னுள் எழத்தான் செய்கின்றன.

அந்நிய கலாசாரத்தோடு மோதும்போது தமக்கு ஏற்படும் அநுபவத்தை புலம்பெயர் இலக்கியவாதிகள்  இலக்கியமாக்கிக் கொண்டுதானே இருக்கின்றார்கள். அவைகள் உங்கள் பார்வையில் படவில்லையா

ஒப்பீட்டளவில் அவை குறைவு என்றே சொல்ல வந்தேன். தேவகாந்தன் எழுதிய ‘கனவுச் சிறை’ நாவலை அண்மையில் படித்தேன்.  ஈழ விடுதலைப் போரின் பின்புலத்தில் எழுந்த அற்பதமான படைப்பு. இப்படியொரு படைப்பு அந்நிய கலாசார மோதுகையை வைத்து எழுதப்பட்டிருக்கிறதா?

சமகாலத்தில் சில பெண் கவிஞர்களின் கவிதைகளை அவதானித்தபொழுது மனிதர்களின்  இனப்பெருக்க உறுப்புகளை தளமாக வைத்து கவிதைகள் புனையப்படுகின்றன. இவைகள் எப்படியான நோக்கங்களுக்காகப் புனையப்படுகின்றன?

பெண் கவிஞர்கள் ஆண் பாலார் மீதுள்ள கோபத்தில் அவ்வாறெல்லாம் எழுதுகிறார்கள். ஆண்களே பெண் உறுப்புக்களை வெளிப்படையாக வர்ணிக்கும்போது, நாமே வர்ணித்தால் என்ன என்ற வாதமே இதற்கு அடிப்படை.  சிலர் புதுமை படைக்கும் ஆர்வத்தில் இதைச் செய்கிறார்கள்.  இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

‘ஆண்களே பெண் உறுப்புக்களை வெளிப்படையாக வர்ணிக்கும்போது, நாமே வர்ணித்தால் என்ன என்ற வாதமே இதற்கு அடிப்படை.  சிலர் புதுமை படைக்கும் ஆர்வத்தில் இதைச் செய்கிறார்கள். இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.’ என்று சொல்கின்றீர்கள். இது பெண்பாலாரது கருத்துச் சொல்லும் உரிமையை மறுதலிக்கும் விதமாக அமையும் ஆபத்து ஒன்று உள்ளதே?

பெண் பாலாருக்கு அந்த உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமையை வெறும் வீம்புக்காகப் பிரயோகிக்கக் கூடாது.

இப்போதுள்ள சூழ்நிலைகளில் தாயகத்திலும்சரி, புலம்பெயர் நாடுகளிலும்சரி இருக்கின்ற சனங்களுக்கு எமது படைப்பாளிகளின் ஆற்றல்கள் திறமைகள் ஆளுமைகள் பற்றி சரியான பார்வைகள் இருக்கின்றதா?

வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஒருசிறு எண்ணிக்கை வாசகர்கள் விமர்சனக் கண்கொண்டு  படைப்புக்களை எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியத்தை ஒரு தவமாகக் கொள்ளும் இவர்களைத் தவிர எழுத்தறிவுள்ள மிகப் பலர் எமது படைப்பாளிகள் பற்றி அறியாதிருப்பது கவலை தருகிறது.

‘வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது’. என்று சொல்கின்றீர்கள் இதற்கான காரணிகள்தான் என்ன?

இணையத்தோடு, முகநூலோடு இந்தத் தலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. உயர்கல்வி கற்பவர்கள் கூட தமக்குத் தேவையானதை மட்டும் பதிவிறக்கம் செய்கிறார்களே தவிர, அகலப் போகிறார்களில்லை. தகவலைத் தேடித் தொகுப்பதும் தேர்வுகளில் தேறுவதுமே கல்வி அல்ல.

விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியச்சூழல் எப்படியாக இருந்தது? யுத்தகாலத்துக்குப் பின்னரான ஈழத்து அல்லது புலம்பெயர் தமிழ் இலக்கியச்சூழல் உங்களுக்கு உவப்பானதாக உள்ளதா?

புலிகளுடைய ஆட்சியில் இலக்கிய முயற்சிகள் உத்வேகம்பெற்றிருந்தது உண்மை.  ஆனால் அவையெல்லாம் ஒற்றைப் படையாக இருந்தன. மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்கவில்லை. மாற்றுக் கருத்து வெளியே இருந்துதான் வந்தது.  போருக்குப் பின் ஒரு தேக்கநிலை காணப்படுகிறது. போர்க் கால அநுபவம் பற்றி எழுத்தாளர்கள் நிறைய எழுத வேணும் – யோ.கர்ணன் போல.

‘போருக்குப் பின் ஒரு தேக்கநிலை காணப்படுகிறது. போர்க்கால அநுபவம் பற்றி எழுத்தாளர்கள் நிறைய எழுதவேணும்’ என்று சொல்கின்றீர்கள். நிலாந்தனில் இருந்து இன்று தமிழினி வரை பல போரியல் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் துரதிஸ்டவசமாக இந்தப் படைப்பாளிகளுக்கு கிடைப்பது என்னமோ துரோகி பட்டமாகவல்லாவா இருக்கின்றது?

போர்க்கால அநுபவங்கள் பற்றி நேர்மையான படைப்புக்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை. கருணாகரன், கர்ணன், நிலாந்தன் முதலிய சிலரே இத்தகைய படைப்புக்களைத் தருகிறார்கள். ‘துரோகி’ப் பட்டம் சூட்டப்படும் என அஞ்சினால் பேனா பிடிக்க ஏலாது. ஒரு காலத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் துரோகி; பிறகு துரையப்பா துரோகி; அதன்பின் அமிர்தலிங்கம் துரோகி, பின்ப மாத்தையா துரோகி, இப்பொழுது டக்ளஸ் துரோகி. தமிழர்கள் பலிக்கடாக்களைத் தேடுவதைவிட்டு, தம்மைச் சுய பரிசோதனை செய்ய வேண்டும். வீழ்ந்துபட்டுக் கிடக்கும் தமிழினம் மீள இதுவே வழி.

கவிதைகளுக்கான வரைவிலக்கணம்தான் என்ன?

கவிதை எதிர்பாராத வியப்பு. ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பார் முழுதும் இல்லை!’ என்றான் பாரதி.  ‘Poetry should surprise by a fine excess’ என்றான் Keats. நல்ல கவிதையில் இந்த வியப்பு அம்சம் இருக்கும். அதீதமான பொருள்களுக்கிடையில் கவிஞன் ஒப்புமை காண்பான். John Donne என்ற ஆங்கிலக் கவிஞன்; ஷேக்ஸ்பியர் காலத்தவன். ஷேக்ஸ்பியரை விடத் திறமைசாலி. காதலர்களை ஒரு compass இன் பாதங்களுக்கு  ஒப்பிட்டான். ‘நீ நிலையான பாதம், நான் சுற்றிவரும் பாதம், நீ உறுதியாக இருக்கும்வரை நான் வரையும் வட்டம் தெளிவாக இருக்கும்!’ என்கிறான்.

கவிதையின் பிறிதொரு பண்பு குறிப்பால் உணர்த்துதல் – power of suggestion. நீண்ட காலம் பிரிந்திருந்த தலைவன் தலைவியிடம் வருகிறான். மேலே பார்க்கிறான்.  காற்றினால் அள்ளுண்டு போகும் முகிலைப் பார்த்துச் சொல்கிறான்;

‘ஓடுகிற மேகங்காள் ஓடாத தேரில் வெறுங்

கூடு வருகுதென்று கூறுங்காள்….’

“வெறுங்கூடு வருகுது” என்றதால், அவன் உயிர் ஏற்கனவே தலைவியிடம் போய்விட்டதென்றே குறிப்பு உள்ளது.

ஈழத்தின் பெரும்பான்மை இனத்தவரின் இலக்கிய வெளியில் உங்களுடைய பங்களிப்புகள் எவ்வாறாக இருந்தன?

சிங்களக் கவிதையில் எனக்கு ஈடுபாடு உண்டு. 2007 இல் ‘தென்னிலங்கைக் கவிதை’என்ற (மொழி பெயர்ப்பு) கவிதைத் தொகுதியே வெளியிட்டிருக்கிறேன். ஆரியவன்ஸ ரணவீர என்ற கவிஞர் என் நண்பர்.  இருவரும் சேர்ந்து ஒரு தமிழ் – சிங்களத் தொகுதி வெளியிடும் திட்டமும் உண்டு.

ஒருகாலத்தில் பிறமொழி இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. ஆனால் ஈழத்து இலக்கியங்கள் பிறமொழிகளுக்கு அதிகளவு  கொண்டு செல்லப்படவில்லை என்ற நிலைப்பாடு அண்மையில் ஏற்பபட்டுள்ளது. இதுபற்றிய உங்கள் அவதானம் என்ன?

ஈழத்துத் தமிழ்ப் படைப்புக்கள் பிறமொழிகளுக்குப் போனது மிகக்குறைவு. இருமொழி அல்லது பன்மொழி அறிவு படைத்தவர்கள் எம்மிடையே குறைவு. இந்தியாவை – குறிப்பாக, தென்னாட்டைப் பாருங்கள்: பலர் இரண்டு, மூன்று மொழி தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள். அடுத்தது; முழுநேர எழுத்தாளர்கள் எம்மிடை இல்லாததும் ஒரு காரணம்.

செம்மொழியான தமிழ் மொழியானது இந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அழிந்து விடும் என்ற எச்சரிக்கையை யுனஸ்கோ நிறுவனம் விடுத்துள்ளது. இதுபற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

தமிழ்  அழிந்துபோகும் என்று நான் கருதவில்லை. திரிந்து விடும் என நான் அஞ்சுகிறேன். தமிழ் நாட்டில் வழங்கும் தமிழைப் பாருங்கள். தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசிச் சிதைக்கிறார்கள். ஈழத்துத் தமிழ் இன்னும் தமிழின் சிறப்பியல்புகளைக் காத்து வருகிறது. வாழும் மொழியாகத் தமிழைப் பேணுவது தமிழர் கையில் தான் இருக்கிறது.

உங்களுக்கான இலக்கியவெளியில் யாராவது ஆதர்சங்கள் இருந்திருக்கின்றார்களா?

கவிதையில் பாரதி மிகப் பெரிய ஆளுமை. ஈழத்து மஹாகவியும் எனக்கு ஆதர்சமே.  கி.ராஜநாராயணனையும் அ.முத்துலிங்கத்தையும் பிடிக்கும்.

ஓர் படைப்புக்கான விமர்சனத்தை படைப்பாளியானவன் எந்தவகையில் நோக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?

படைப்பாளிக்கு விமர்சனம் ஒரு பின்னூட்டு. தன் நூல் வாசகனால் வரவேற்கப்படுகிறதா நிராகரிக்ப்படுகிறதா என்று தெரிந்து கொள்வது அவனுக்கு மிக அவசியம். ஆனால் பல படைப்பாளிகள் விமர்சனத்துக்கு முகம் கொடுப்பதில்லை, முகம் சுருங்கிவிடுகிறார்கள்.

மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடுகள்தான் என்ன?

மரபுக் கவிதை யாப்பொழுங்கைப் பேணுவது, செய்யுள் வடிவத்தில் அமைவது. புதுக்கவிதை வடிவத்தை நிராகரித்து கருத்தை முதன்மைப்படுத்துவது. ஆனால் ஆர்வ மேலீட்டால் புதுக்கவிதை புனைபவர்கள் புதுக்கவிதைக்கும் ஒரு லயம் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். ‘புதுக்கவிதைக்கும் ஓசையுண்டு’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், ‘ஜீவநதி’யில்.

நவீன கவிதைககளின் தாக்கங்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடுதான் என்ன? ஒரு சிலர் அவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்கின்றார்களே?

பல புதுக்கவிதைகள் புதிர்போலவும் விடுகதைகள் போலவும் விளங்கக் காண்கிறேன். யாருக்காக எழுதுகிறேன் என்ற பிரக்ஞை பேனை பிடிக்கும் ஒவ்வொருவனுக்கும் இருக்க வேண்டும். என் தமிழறிவைப் பற்றி எனக்கு மிக்க திருப்தி உண்டு. எனக்கே புரியாமல் ஒருவன் எழுதும் கவிதை சாதாரண வாசகனுக்குப் புரியுமா?

உங்கள் அனுபவத்தில் எதிர்கால கவிதைகள் எப்படியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?

கவிதை படிப்பவர்கள் மிகச் சிலரே. சிறுகதைகளும் நாவல்களுமே வாசகர்களைக் கவர்கின்றன.  கவிதை வடிவத்தில் யாரும் இப்பொழுது காவியம் செய்வதில்லை. ஆனால் தனிக்கவிதைகள்  – குறுங்கவிதைகளுக்குப் பெருவரவேற்பு உண்டு. ஜெயபாலன், சேரன் முதலிய ஈழத்துக் கவிஞர்கள் இத்துறையில் பிரகாசிக்கின்றார்கள்.  நவீன  வடிவமைப்பு, அச்சு வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். கவிதைகளை  கவிஞர்களுடைய சொந்தக் குரலில் பதிவு செய்து இணையத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

கவிதை என்பது எத்தகைய சூழ்நிலைகளில் உருவாகின்றது?

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என. பக்தியில் பெருகலாம், ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நீண்ட வழி போனீரே!’ என்பது போல். சோகத்தில் உருவாகலாம் – ,  – ‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்’ விரக்தியில் தோன்றலாம் – ‘ கொலைவாளினை எடடா, மிகுகொடியோர் செயல் அறவே!’ என. வீராவேசத்தில் வெளிப்படலாம்  – ‘பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி, அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்!’ என- கவிதை மகிழ்ச்சியில் பிறக்கலாம்.

உங்கள் காலத்தில் இருந்த கவிதைப்படிமங்களுக்கும் சமகாலத்தில் இருக்கின்ற கவிதைப்படிமங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் எப்படியாக இருக்கின்றது?

எங்கள் காலத்துப் படிமங்கள் பண்பாட்டில் இருந்து வந்தன. இயற்கை, கோயில், விழாக்கள் கலைகளினடியாகத் தோன்றின. இப்பொழுது கவிஞர்கள் அதிர்ச்சியூட்டும் படிமங்களைப் பெரிதும் கையாள்கிறார்கள். பா.அகிலனுடைய ‘சமரகவிதைகளை’ப் படியுங்கள்; புரியும்.

எந்தவகையில் அதிர்ச்சியூட்டும் படிமங்களைப் பெரிதும் கையாள்கிறார்கள்?

சதாத் ஹஸன் எழுதிய ‘மந்தோவின் பெண்கள்’ சிறுகதையில் வரும் தொடர்ச்சியாக வல்லுறவுக்கு ஆளான ஒரு பெண்ணை மாதிரியாகக் கொண்டு 2009 மே இல் நடந்த பேரழிவின் போது, அகிலன் எழுதியுள்ள கவிதை ஒன்று. இதே போல பாதிக்கப்பட்ட ஒருத்தி, யாரோ வரும் அரவம் கேட்டு, அனிச்சையாக, தன் கீழாடையை நீக்குவதாக அகிலன் சித்திரிக்கிறார். இது ஓர் அதிர்ச்சியூட்டும் படிமம்.

மரபுக்கவிதைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றனவா?

மரபுக் கவிதை உயிர்ப்புடன் இருக்கிறது. அது எங்களுடைய காவியங்களுக்கும் பக்தியிலக்கியத்துக்கும் வாகனமாய் இருந்தது. பிற்காலத்தில் குறவஞ்சி, பள்ளு, சிந்து வகைகளூடு வாழ்ந்தது. புதுமை மோகத்தில் அதை இழக்க நான் தயாரில்லை.

நவீன கவிதைகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள். புதிய புதிய சிந்தனைகள், போக்குகள் – நோக்குகள் என்பவற்றை நவீன கவிதை பேசவேண்டும். பழைய உவமை, உருவகங்களை விட்டு, பதிய படிமங்களைப் பிரயோகிக்க வேண்டும். நவீன கவிதை நம்மொழிக்கு வளம் சேர்க்க வேண்டும். ‘சோதிமிக்க நவகவிதை’ என்று பாரதி கண்ட கனவு நனவாக வேண்டும்.

மரணத்துள் வாழ்வோம் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பானது ஈழத்து இலக்கியப்பரப்பில் பெரும் அதிர்வலைகளை தோற்ருவித்தது. ஆனால் போர் முடிவடைந்ததின் பின்னர் சனங்களின் வலிகளையும் கையறு நிலைகளையும் சமகால அரசியல் தகிடுத்தங்களையும் பாடுபொருளாகக் கொண்டு ஏன் ஓர் கவிஞர்களின் சங்கமம் வராமல் போனது?

மரணத்துள்  வாழ்ந்ததைப் போலவே இறுதிப் போரினுள் வாழ்ந்த அநுபவங்கள் எழுதப்படுகின்றன.  ‘எங்கள் காலத்தில் ஊழி நடந்தது’ பார்க்கவில்லையா? கருணாகரனுடைய ‘ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புக்க’ளை விட வேறென்ன வேண்டும்? தொகுப்புக்கள் இனித்தான் வரவேண்டும்.

ஈழத்திலே நாட்டாரியல் இலக்கியம் எவ்வளவு தூரத்துக்கு வளர்ந்திருக்கின்றது?

நாட்டார் இலக்கியம் காலாதிகாலமாக வாய்மொழி வடிவத்தில் வாழ்ந்துவந்துள்ளது. அவ்வப்போது அவற்றைத் தொகுத்து அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அண்மையில்; கவிஞர் அனார் கிழக்கிலங்கை நாட்டார் பாடல்களைத்  தொகுத்திருக்கிறார் – ‘பொடுபொடுத்த மழைத்தூத்தல்;’ என்ற தலைப்பில் நல்லபணி. நாட்டார் பாடல்களை ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் தொடர்ச்சியாக சார்க் நாடுகளின் இலக்கிய அரங்குகளுக்கு சென்று வருபவர்; அங்கு உங்களுக்கு எப்படியான அனுபவங்கள் ஏற்பட்டன? ஈழத்துக் கவிதைகளின் புரிதல்கள் ஏனைய சார்க் நாடுகளில் எப்படியாக இருந்தன?

சார்க் இலக்கிய விழாவில் சில மகாகவிகளைச் சந்தித்து அளவளாவும் பேறு கிடைத்தது.  சீதாகந் மகாபத்ர முதுபெருங்கவிஞர். ஓடிய மொழி தாய்மொழி. ஏராளமான விருதுகள் பெற்றவர். மானிடவியல். இலக்கியம் பற்றி உலகப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றியுள்ளார். ஆதிவாசிகளின் வாய்மொழிக் கவிதைத் தொகுதிகள் பத்து வெளியிட்டிருக்கிறார்.  இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் அவர் கவிதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நேபாளக் கவிஞர் அபி சுபேதி இன்னொருவர். ஆங்கிலத்தில் மட்டும் எழுதும் அருந்ததி சுப்பிரமணியம், வங்காளக் கவிஞர் நூறுல் ஹ_டா முதலிய பலரையும் சந்தித்தது மறக்கமுடியாதது.

என் கவிதைகளுக்குக் – குறிப்பாக வங்கதேசக் கவிஞர்களிடமிருந்து – நல்ல வரவேற்புக் கிடைத்தது.

நல்லாட்சி அரசில் தமிழர் அடிப்படை வாழ்வியலில் பாரிய மாற்றங்கள் வந்துள்ளதாக எண்ணுகின்றீர்களா?

நல்லாட்சி அரசுக்குப் பல சவால்கள் உள.  தாம் எதிர்பார்க்கும் அளவுக்கு வேகமாக இவ்வரசு செயற்படவில்லை என்ற மனக்குறை சிறுபான்மை மக்களுக்குண்டு. மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரும் இனவாத சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன. மைத்திரி கயிற்றின் மீது நடக்கிறார்.  தமிழர்கள் பொறுமை காக்க வேண்டும்.

தமிழர்களின் வாழ்வே சமரசங்களுடனும் பொறுமைகாத்தலுடனும் தானே நகர்ந்தது வரலாறாக இருக்கின்றது?

நம்பிக்கை இழக்காதீர்கள். வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் எல்லாம் மீறப்பட்ட பின்தான் ஆயுதம் ஏந்தினோம். அதற்கான நியாயம் இருந்தது. 2009 மே யோடு எல்லாம் இழந்தோம். மிகவும் பலவீனமான இன்றைய நிலையிலும், அரசியற் சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. 60 வருஷ வரலாற்றில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. தமிழர் உரிமையை மறுப்பதில் முனைப்பாக இருந்த இரு பெருங்கட்சிகள் அரசமைத்திருக்கின்றன. குஞ்சு பொரிக்கலாம்; கூழ் முட்டையாகலாம், நட்டமில்லையே!.

சோ பத்மநாதனின் இலக்கிய அரசியல்தான் என்ன?

தமிழ் அடையாளத்தைப் பேணும் அதேவேளை மொழி, இன, மத எல்லைகளைக் கடந்து இலக்கியத்தை நேசிக்க, மதிக்க, கொண்டாட முன்னிற்பவன் நான்.  ‘ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும் என்று  எல்லாக் காலங்களிலும் கவிஞர்கள் கனவு கண்டு வந்துள்ளனர். எனக்கும் அந்தக் கனவுண்டு. உலக இலக்கியப்பரிச்சயம் எனக்கு அதைக் கற்றுத் தந்துள்ளது.

காலம் -கனடா

02 மார்கழி  2016

(Visited 3 times, 1 visits today)